பணச்சடங்கு
ஆசி கந்தராஜா
நாகலிங்கம் மாஸ்டர் மனைவியுடன் சிட்னிக்கு வந்து மூன்று மாதமாகிறது. இது அவர்களது முதல் வருகை மட்டுமல்ல முதலாவது விமானப் பறப்பும்கூட. முப்பத்தைந்து வயதைத் தாண்டியும் திருமணமாகாமல் 'டிமிக்கி' விடும் மகனுக்கு, ஒரு கால்க்கட்டுப் போடும் வைராக்கியத்துடன் ஒரு வருஷ விசாவில் சிட்னிக்கு வந்திருக்கிறார்கள். நாகலிங்கம் மாஸ்டர் விரும்பியிருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு நிரந்தரமாகக் குடிபுகுந்து, தமிழ் மூத்த பிரசைகள் சங்கம், கலை இலக்கியப் பேரவை, தமிழர் கூட்டமைப்பு, இந்துக் கோவில்கள் என பல்வேறு தமிழ், சமூக, சமைய அமைப்புக்களின் தலைவராகியிருக்க முடியும். அந்த அளவுக்கு வல்லமையுள்ள மனுஷன் அவர். பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக வாழ்க்கையைத் துவங்கி, படிப்படியாக உயர்ந்து முதலாம் தர பாடசாலை அதிபராக பத்து வருடங்கள் ஊரில் பணிபுரிந்த பின்னர் இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறார். அவரது மனைவி பூமணி டீச்சரும் குறைந்தவரில்லை. ஆரம்ப பாடசாலை ஒன்றின் தலமை ஆசிரியர். அத்துடன் ஊரிலுள்ள மாதர் சங்கத்தின் நிரந்தர தலைவியும்கூட!