Saturday, 20 June 2026
Tuesday, 5 May 2026
டாட்டூ சித்திரங்கள்.
ஆசி
கந்தராஜா
-1-
உள்நாட்டு
ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பிரசுரமான பெட்டிச் செய்தி இது!
‘பயிற்றப்பட்ட தாதி ஒருவர், தனது பராமரிப்பின்
கீழிருந்த நோயாளியின் இறப்புக்குக் காரணமாக இருந்தார் என்ற சந்தேகத்தில், தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தாதியும் நோயாளியும் இலங்கைத் தமிழர்கள்
எனத் தெரியவருகிறது. விசாரணை தொடர்கிறது’.
செய்தியில்
சொல்லப்பட்ட இருவரும் தமிழர்கள் என்பதால் அங்குள்ள தமிழ் ஊடகங்களும்
பக்கம்பக்கமாகச் செய்திகளையும் புலனாய்வுக் கட்டுரைகளையும் வெளியிடத் துவங்கின. யூ-டியூப்
செய்தியாளர்களும் தங்கள் பங்கிற்கு கற்பனை கலந்து கிசுகிசு தகவல்களை அள்ளித்
தெளித்தார்கள். காலஞ்சென்ற தமிழர், குலசேகரம் என்பதும் அவர் அந்த நாட்டில்
பிரபல்யமான பிரமுகர், புரவலர், கோவில்
தர்மகர்த்தா என்பதும் அங்குள்ள தமிழர்களுக்கும் தமிழ் மீடியாவுக்கும் தெரியும்.
அந்த அளவுக்கு அவர் பிரபல்யமானவர். அவரின் இறுதிச் சடங்கு, சகல
மரியாதைகளுடன் பெரும் தொகையான வெள்ளையர்களும் கலந்து கொண்ட நிகழ்வாக நடந்தது.
சென்ற மாநகர சபைத் தேர்தலில் குலசேகரம் தமிழர்கள் செறிந்து வாழும் தொகுதியில் போட்டியிட்டு கவுன்சில் மெம்பர் ஆனவர். அதனால் மாநகர சபைக் கட்டிடத்தில், கவுன்சில் கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. வழமைக்கு மாறாக, உயிரோடு இருக்கும்போதே ஈழவிடுதலை அமைப்பொன்றினால், பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். அதனால் வெளிநாடுகளில் வெளிவரும் ஈழவிடுதலை சார்ந்த பத்திரிகைகள், அவர் செய்த சேவைகள் பற்றி பக்கம் பக்கமாகச் சிலாகித்து எழுதின. மொத்தத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் பலர் அவரது இறப்புக்கு அனுதாபம் தெரிவித்து உச்சுக்கொட்டினார்கள். அறுபது வயதைத் தாண்டிய பெரிசுகள் மட்டும் இவன் செய்த அநியாயங்களுக்கு வேறையெப்படிச் சாவான்? எனச் சபித்தார்கள். ஆனால், குலம் என வெள்ளையர்களால் அழைக்கப்பட்ட குலசேகரத்துக்கு வைத்தியசாலையில் என்ன நடந்ததென்பதோ, எப்படி இறந்தார் என்றோ வெளியிலுள்ளவர்களுக்குத் தெரியாது. அவரது குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் கமுக்கமாகவே இருந்தார்கள். பிரபலமான ஒரு தனியார் வைத்தியசாலையில் குலசேகரம் இறந்தார் என்பதை அறிவதில் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்குச் சிரமம் இருக்கவில்லை. அதிக கட்டணங்களை அறவிடும் தனியார் வைத்தியசாலையே அதுவென்பதும் குலசேகரம் போன்ற பெரும் பணக்காரர்களே அங்கு சிகிச்சை பெறமுடியும் என்பதும் ஊரறிந்த விஷயம்.
Wednesday, 29 April 2026
மதிப்பீடு:
மதிப்பெண்: 9.5 / 10
ஆசி கந்தராஜாவின் “எண்ணம் இரங்காதோ?”
இச் சிறுகதை; புலம்பெயர்ந்த உடலின் உள்ளே சிக்கிய தாய் மண் நினைவின் இறுதி மூச்சு.
Sunday, 5 April 2026
எண்ணம் இரங்காதோ?
ஆசி கந்தராஜா
(‘அந்திமழை’ ஏப்ரல் 2026)
சிங்காரம்பிள்ளை மரணப் படுக்கையில் படுத்துக் கிடந்தார். வயோதிபத்தின் ரேகைகள் முகத்தில் அழுத்தமாகப்
பதிந்திருந்ததால் கண்கள் சுருங்கிச் சிறுத்திருந்தன. தளர்ந்து தொங்கிய வாய்த் தசைகள் எதையோ
சொல்ல அசைந்தாலும் வார்த்தைகள் வெளிவரவில்லை. அவரது இறப்பை எதிர்பார்த்து, பிஜி இந்தியர்கள் முற்றத்தில் கூடியிருந்தார்கள். உயிர் இன்னமும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருப்பதற்கான காரணம் மிக
நெருக்கமானவர்களுக்கு மட்டும் தெரியும். எத்தனை ஆண்டுகால ஏக்கம் அது!
வீட்டுக் கோடியில்
கிளைபரப்பி நின்ற மா மரத்தின் கீழே, ஆண்கள் காவா அருந்திக் கொண்டிருந்தார்கள். பசிபிக்
தீவுகளில் இயற்கையாக வளரும் காவாச் செடி, வெத்திலை குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேரைக் காயவைத்து
இடித்த மாவை, தண்ணீரில்
ஊறவிட்டு வடிகட்டினால் வரும் பானம் காவா. இது மிதமான போதை தருவது. மூளைக்கும்
உடலுக்குமான தகவல் பரிமாற்றத்தை மந்தமாக்கி, உடம்பைச் சோர்வடையச் செய்வது. பிஜி
மக்களின் சடங்கு சம்பிரதாயங்களில் தவிர்க்க முடியாதது. கால ஓட்டத்தில் பிஜி
இந்தியர்களும் இதைத் தத்தெடுத்து தமதாக்கிக்கொண்டார்கள்.
போதை தலைக்கேறியதால்
சிங்காரம்பிள்ளையின் மகன் தென்னை மரத்தின் கீழே சுருண்டிருந்தான். வழமைபோல
காவாவுடன் தென்னஞ் சாராயமும் அவன் அருந்தியிருக்கவேண்டும்.
காவா தயாரிக்கும் ஆரவாரம்
கேட்டு ஆண்பெண் என்ற பேதமின்றி சுதேசிகளும் அங்கு வந்திருந்தார்கள்.
நெட்டையும் குட்டையுமான
பல தென்னை இனங்கள் நிறைந்த அந்த வளவும் வீடும் சிங்காரம்பிள்ளையின் கடும்
உழைப்பில், சிறுகச்சிறுகச்
சேர்த்த பணத்தில் உருவானவை. இலந்தை, நாவல் முதல் இந்தியாவில் காணப்படும் எல்லா மரங்களும் அங்கு
நின்றன. மாவும் பலாவும் முருங்கையும் காய்த்துக் குலைகுலையாகத் தொங்கின.
கறிமொந்தன் உட்பட எல்லா வகை வாழை
இனங்களும் வஞ்சகமில்லாமல் குலை தள்ளின.
அயல்வீட்டு சுதேசிப்
பெண்ணொருவர் முற்றிய மாங்காய்களைப் பிடுங்கி தனக்கும் மற்றவர்களுக்கும்
பத்திரப்படுத்திய பின், அணில் குடைந்த
மாங்காய்களைத் தோல் சீவி வெட்டி, உப்புத்தூள் கலந்து காவாவுக்கு உவப்பான சைட்டிஸ்
தயாரித்தார். சிங்காரம்பிள்ளை வளர்த்த நாய்மட்டும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
தொடர்ந்து குலைத்தபடி வளவைச் சுற்றி வந்தது.
கரும்புத் தோட்டத்தில்
வெய்யில் குடித்துக் காய்ந்த உடம்பு படுக்கையில் தளர்ந்துகிடக்க, பாதி
திறந்திருந்த விழிகள் அருகிலிருந்த றங்குப் பெட்டியில் நிலைகுத்தி நின்றன.
சிங்காரம்பிள்ளை பிஜிக்கு வந்தபோது கொண்டுவந்த றங்குப்பெட்டியது. பெயின்ற் கழன்று
அடிக்கடி துருப்பிடிக்கும் றங்குப்பெட்டி, தேங்காயெண்ணையும் மண்ணெண்ணையும் சேர்ந்த கலவை எண்ணையால்
துடைக்கப்பட்டு, ஆமைப் பூட்டால் பூட்டப்பட்டிருக்கும். றங்குப்பெட்டியைத் திறந்து பார்க்க
அவர் எவரையும் அனுமதித்ததில்லை. ஆனாலும்
றங்குப்பெட்டி உனக்குத்தான் என அடிக்கடி பேரனுக்குச் சொல்வார்.
சிங்காரம்பிள்ளையின் இறப்பு அங்கு வந்திருந்தவர்களுக்கு கவலைச் சாவல்ல. அதுவொரு கலியாணச் சாவு. தொண்ணூற்று வயதுக்குமேல் வாழ்ந்து சாதித்த கட்டை, நிம்மதியாகப் போய்ச் சேரவேண்டியதுதான் என்ற நினைப்பு. வந்திருந்தவர்களின் எதிர்பார்ப்பில் மண்ணைத் தூவியபடி சிங்காரம்பிள்ளை தொடர்ந்தும் சேடமிழுத்துக் கொண்டிருந்தார்.

