நீலமலை இளவரசி
ஆசி கந்தராஜா
(காலச்சுவடு, மே மாதம் 2023)
நீலமலையின் ஒடுங்கிய
பாதையில் நடந்து கொண்டிருந்தாள் மகிழ்மொழி. வன இலாகா தங்கள் தேவைக்காக அமைத்த மண்
பாதையிது. கங்காரு, வாலாபீ, வொம்பற், குவாலா ஆகியன பாதையில்
சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்தன. நீலமலைக்கு மகிழ்மொழி முன்னரும் தனியேயும்
தாயுடனும் தன்னுடன் படிக்கும் தோழிகளுடனும் வந்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும்
அதற்கான தேவை இருந்தது. இன்றும் அப்படித்தான்!
திடீரென நீலமலையின் குளிரையும் தாண்டி உடம்பில் உஸ்ணம் பரவி வேர்த்ததால், கொண்டுவந்த பைக்குள் இருந்த கைக்குட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்தாள். அடிவயிறு கவ்விப் பிடித்தது. சிறுநீர் கழிக்கவேண்டும் போல இருந்தாலும் வரவில்லை. தொடர்ச்சியாக குருதி கசிவதால் உள்ளாடை நனைந்து நசநசத்தது. பாதத்திலிருந்து பிட்டம்வரை தசை நார்கள் வலுவிழந்து வலித்தன. அவளால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. பாறி விழுந்த யூக்கலிப்டஸ் மரக் கட்டைமேலே அமர்ந்து ஓய்வெடுத்தாள். ஊசியிலை மரங்களுடன் ஓங்கி வளரும் யூக்கலிப்டஸ் விருட்சங்கள் ஆவியாக வெளிவிடும் தைலங்களை ஆழமாக உள்ளே இழுத்துச் சுவாசித்தாள். உடல்வலியைப் போக்க யூக்கலிப்டஸ் தேநீர் அருந்துவதாகப் பள்ளித்தோழி சொன்னது நினைவில்வர யூக்கலிப்டஸ் மரக் குருத்துக்களைப் பிடுங்கிக் கடித்தாள். மறுகணம் பையிலே பத்திரப்படுத்தி வைத்திருந்த டப்பாவின் மூடியை திருகிச் சரிபார்த்தாள். நடந்து முடிந்த சம்பவங்களின் நினைவுகள் மனதில் சுழன்றடிக்க, நினைவைச் சுருக்கி டப்பாவை அணைத்து மௌனித்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த மாக்பை பறவையொன்று தலைக்கு மிக நெருக்கமாகப் பறந்து அவளைத் திடுக்கிட வைத்தது. இயல்பை மறந்து மாக்பை அவளின் தலையைக் கொத்தாதது அதிசயம்தான்.