Saturday 23 January 2021

 தேன்சுவைக்காத் தேனீக்கள்

-ஆசி கந்தராஜா-

ட்டப் பின்படிப்புக்கு புலமைப்பரிசில் பெற்றுநளாயினி யப்பான் வந்து ஆறுமாதமாகிறது. பாஷை இன்னமும் சரியாகப் பிடிபடவில்லை. இதனால் மொழியில் பயிற்சி பெறவென யப்பானிய சிறார்களுடன் வலிந்து ஒட்டிக்கொள்வாள்.

அன்று பல்கலைக் கழகத்திருந்து நளாயினி வீடு திரும்புகையில் யப்பானியச் சிறுமிகள் இருவர் சாமான் நிரம்பிய கைகளுடன் நடந்து வந்தார்கள். வயது பத்தும் பன்னிரண்டுமாக இருக்கலாம். நிச்சயம் பதினைந்தை தாண்டாது. பைகளின் சுமை அவர்களின் முகங்களில் தெரிந்தது.

நான் உதவட்டுமா…?’ என நளாயினி பேச்சை ஆரம்பித்தாள். பெரியவள் பதிலுக்குப் புன்னகைத்தாள். சின்னவளோ நளாயினியை ஏக்கத்துடன் பார்த்தாள்.

இப்படிக் கொடு நான் தூக்கிவருகிறேன்’ என்று சின்னவளின் கையில் இருந்த பைகளை நளாயினி தன் கைகளுக்கு மாற்றிக் கொண்டாள்.

உன் பெயரென்ன…?’

கெய்கோ’ என்றாள் பெரியவள்.

என் பெயர் சடகோ’ என்றாள் சின்னவள்நளாயினி கேட்காமலே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் பாவனையில்.

இந்த வீதியில் உங்கள் வீட்டுக்கு முன்னால்தான் எங்கள் வீடும் இருக்கிறது. உங்களை ஓரிருநாள்கள் உங்கள் வீட்டின் முன்னே கண்டிருக்கிறேன்’ என சம்பாஷனையை தொடர்ந்தாள் கெய்கோ.

சாமான் வாங்குவதற்கு வீட்டில் பெரியவர்கள் இல்லையா…?

அவர்கள் மௌனமாக நடந்தார்கள்.

அம்மா வேலைக்குப் போய்விட்டாளா…?’ நளாயினி தொடர்ந்து கேட்டாள்.

அம்மா தொழிற்சாலை விபத்தொன்றில் இறந்து போனாள். அப்பாவுக்கு இன்று இரண்டு நேர ‘சிப்ட்’ (Shift), வீட்டுக்கு வர நேரமாகும்’ என்றாள் பெரியவள் மெலிந்த குரலிலே.

அவளுக்கு மனசும் பையும் கனத்திருக்க வேண்டும். ‘நப்கின்’ பெட்டியை பையிருந்து எடுத்து தங்கை சடகோவிடம் கொடுத்தாள்.

நப்கின் யாருக்கு…?’ நளாயினி விடாது கேட்டாள். இதை விடுப்பு என்றும் சொல்ல முடியாது. ஏதோ ஒரு உந்துதல்.

தம்பிக்கு. அவனுக்கு மூன்று வயதாகிறது. இன்னமும் நப்கின் கட்டவேண்டும். ஆனாலும் சுட்டிப்பயல்…’ என்றாள் சின்னவள்.

அது சரிஎங்களைப் பற்றியே கேட்கிறீர்கள்உங்களைப் பற்றி சொல்லவில்லையேஆங்கிலம்தான் உங்கள் மொழியா?’ என பெரியவள் மீண்டும் உரையாடலில் நுழைந்தாள்.

அப்படியல்லஆங்கில மொழியை நன்றாகப் பேசுவேன். அதனை தாய்மொழி போன்றுதான் கற்றிருக்கிறேன். ஆங்கிலம் கற்றுக் கொள்ள உங்களுக்கு விருப்பமா?’ என நளாயினி கேட்டாள்.

நான் பாடசாலையில் ஆங்கிலமும் பிரெஞ்சும் படிக்கிறேன். எனக்கு இன்று ஆங்கிலத்தில் நிறையவே வீட்டுப்பாடம் இருக்கிறது. வீட்டில் வேலை முடிந்தபின்பு உங்களிடம் வந்தால் உதவுவீர்களா?’

 ‘நிச்சயமாக. அது சரிநீதான் வீட்டு வேலைகளையும் செய்துஉன் தம்பியையும் கவனித்துக் கொள்வாயோ…?’

அப்பா வேலை செய்யும் தொழிற்சாலையில்பிள்ளை பராமரிப்பு நிலையமுண்டு. ஆனால் அங்கு பாரிய இடநெருக்கடி. அதனால் அரை நாள் மாத்திரம் அவன் அங்கு போக அனுமதி. நான் பாடசாலையில் இருந்து திரும்பும் போது அவனை வீட்டுக்கு கூட்டி வந்து விடுவேன். என்றாள் கெய்கோ பெரிய மனுஷத் தோரணையில்.

அவர்களது வீடு நெருங்கியது!

மாலை வீட்டுக்கு வருகிறேன்’ என்று கூறிகெய்கோ தங்கையுடன் விடைபெற்றாள்.

ங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை மரப் பலகைகளால் செய்யப்பட்டவை. இடநெருக்கடி காரணமாக எல்லாமே பரப்பளவில் சிறிய வீடுகள். தொடர்மாடிக் குடியிருப்புகளும் அப்படித்தான்.

நளாயினியின் வாடகை குடியிருப்பில் ஒரு அறை மாத்திரம்தான். இரவில் அதை படுக்கை அறையாகப் பாவிப்பாள். பாயைச் சுருட்டி வைத்துவிட்டால் பகலில் அது வரவேற்பறை. அறையுடன் இணைந்து சிறிய கழிப்பிடம். அறையின் ஒரு பகுதியை சமையல் செய்வதற்கு தோதாக மூங்கில் கழிகளால் தடுத்திருந்தார்கள். இந்த புறாக்கூட்டுக்கே நளாயினி தன் புலமைப்பரிசில் பணத்தின் பெரும்பகுதியை வாடகையாக செலுத்த வேண்டியிருந்தது. யப்பானுக்கு புறப்படும்போது யாரும் இத்தகைய இடர் பாடுகள் பற்றி அவளுக்குச் சொல்லவில்லை. இங்கு படிக்க வாய்ப்புக் கிடைத்தபோது சொர்க்கத்தின் வாயில் திறந்ததாகவே நளாயினி துள்ளினாள். பளபளக்கும் அழகிய கார்களும்நுட்பமான எலெக்ரோனிக் சாமான்களும் வலுவான பொருளாதாரமும்தான் அவள் யப்பானைப் பற்றி அறிந்து வைத்திருந்தவை.

நளாயினியின் வதிவிடம்தொழிலாளர் வாழும் பகுதியில் அமைந்திருந்தது. அங்குள்ளவர்கள் உழைப்புகளுக்கும் கஷ்டங்களுக்கும் இடையே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். இருபதடிக்கு பத்தடி விஸ்தீரணமுள்ள குடியிருப்புகளிலே தொழிலாளர்கள் முணுமுணுப்பின்றி வாழ்ந்தார்கள். குளியல் அறையில்லாத வீடுகள் ஏராளம். அந்த குறைபாட்டினைப் பாராட்டாதுஇயல்பாக அவர்கள் வாழ்ந்ததுதான் நளாயினிக்கு ஆச்சரியமாக இருந்தது. குடியிருப்பினுள்ளே எடுத்துச் செல்லக்கூடிய பிளாஸ்ரிக் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி அதற்குள் குந்தி இருந்து குளித்துக் கொள்வார்கள். சம்பிரதாய முறைப்படி முதலில் வீட்டுத் தலைவனின் முறை. பின்னர் பிள்ளைகள் குளிப்பார்கள். இறுதியில் வீட்டுத் தலைவிஅவர்கள் அனைவரும் குளித்த தண்ணீரில் தன் உடம்பை சுத்தம் செய்து கொள்வாள். தண்ணீரை வீணாக்காத முறைதான் இதுவென்றாலும்இத்தகைய ‘காக்கா’ குளிப்புக்கு நளாயினி பழக்கப்பட்டவளல்ல. இதனால் அவள் பெரும்பாலும் பல்கலைக்கழக குளியல் அறையில் ஆசைதீரக் குளித்துக் கொள்வாள்.

மணி பத்தை தாண்டிவிட்டது. வழமையாக எட்டு மணிக்கு படிக்கவரும் கெய்கோ இன்னமும் வரவில்லை. நளாயினி பாயை விரித்து படுக்கைக்கு தயாரானாள். முன்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. நளாயினி கதவை திறந்தாள். கெய்கோ நின்றாள். மன்னிப்புக் கேட்கும் பாவம் முகத்தில் அப்பியிருந்தது. வீட்டில் அதிக வேலைகள்போலும். படிக்க வரச் சுணங்கிவிட்டது. யப்பானியர்கள் கணக்குச் செய்யப் பாவிக்கும் Sorban’ எனப்படும் மணிகள் கோர்க்கப்பட்ட மரத்தாலான மணிச் சட்டம் புத்தகங்கள் சகிதம் வந்திருந்தாள். யப்பானிய வழக்கப் படி முட்டிபோட்டு குதிகளில் பிட்டத்தை தாங்கிஅறையின் நடுவேயுள்ள குட்டையான மேசையின் முன் அமர்ந்து கொண்டாள்.

கெய்கோ வழமைபோல இன்றும் சிக்கலான கணக்குகள் நிறையவே வைத்திருந்தாள். சூழல்பாடத்திலும் வீட்டு வேலைகள் உண்டு. அத்துடன் தினமும் ஐம்பது புதிய ஆங்கிலச் சொற்களையாவது மனனம் செய்ய வேண்டுமென்ற பழக்கத்தையும் மேற்கொண்டிருந்தாள். அவளது ஆசையெல்லாம் பல்வேறு மொழிகளில் பாண்டித்தியம் பெற்று வெளிவிவகார இலாகா ஒன்றில் பணியாற்ற வேண்டுமென்பதே. அதற்கான வெறியும் வேகமும் அவளின் படிப்பில் தெரிந்தது. மணிச்சட்டத்தை பயன்படுத்தி கெய்கோ கணக்குகளைச் செய்யத் துவங்கினாள்.

நளாயினி யப்பான் வந்த புதில் யப்பானியர்கள் தேனீக்களைப் போன்று சுறுசுறுப்பாக உழைப்பதும்கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளித்து வாழ்தலும் மிகவும் பிடித்துப் போயின. இருப்பினும் எலெக்ரோனிக் யுகத்தின் உச்சத்தை அடைந்துள்ள நாட்டில்பலர் கல்குலேற்றர்களை நாடாது இன்னமும் Sorban’ என்னும் மணிச்சட்டத்தை பாவிப்பது நளாயினிக்கு ஆச்சரியம் தந்தது. இதுபற்றி கெய்கோவிடம் கேட்டாள்.

என்னதான் விதம்விதமான இயந்திரங்களை நாம் உற்பத்தி செய்தாலும் யப்பானிய சமூகம் பழைமை பேணவும் விரும்புகிறது. இதனால்தான் ஆரம்ப பாட சாலைகளில் Sorban’ பாவித்து கணக்குச் செய்யகற்றுத் தருகிறார்கள்’ என்றாள் கெய்கோ நாட்டுப்பற்றும் கலாசார ஈடுபாடும் தொனிக்க.

வழமைபோல நாளையும் கெய்கோவுக்கு காலை ஏழுமணிக்கு பாடசாலை துவங்கும். ஐந்து மணிக்கு எழுந்தால் தான் வீட்டு வேலைகளை முடித்து பாட சாலைக்கு செல்லலாம். இன்றைய வீட்டுப்பாடங்களை முடிக்க நிச்சயம் நள்ளிரவை தாண்டிவிடும். அவளின் சிறிய கண்கள் அசதியினால் மேலும் சிவந்து இருந்தன. சப்பையான தன் முகத்தை பஞ்சு விரல்களினால் அடிக்கடி அழுத்தி ‘மஜாஜ்’ செய்தவாறேதான் செய்த கணக்குகளை மீளாய்வு செய்து கொண்டிருந்தாள். கெய்கோவை பார்க்க நளாயினிக்கு பரிதாபமாக இருந்தது. களைப்பைப் போக்க யப்பானிய பச்சை தேநீர் தயாரித்து வந்து அவள் முன் அமர்ந்து கொண்டாள். கெய்கோவின் வீட்டுப்பாடம் அவளது வயதுக்கும் தரத்துக்கும் அதிகமானதாகவே நளாயினிக்கு தோன்றியது. யப்பானிய கல்வித்திட்டம் மிகத் தரமானவர்களை வடித் தெடுக்கும் வகையில் கடினமாக்கப் பட்டிருப்பதையும் அவள் அறிவாள்.

வீட்டுப்பாடத்தை முழுதாக முடிக்காமல்நாளை வகுப்புக்கு போனால் என்ன நடக்கும்..என நளாயினி யப்பானிய பாடசாலைகளின் நடைமுறைகள் பற்றி அறியும் ஆவலில் கேட்டாள்.

முடிக்காமல் போவதா…உங்கள் நாட்டில் நீங்கள் அப்படியும் செய்வதுண்டாஎன விசித்திரமாக நளாயினியைப் பார்த்து கேள்விகளைத் தொடுத்தவள்நேரத்தை வீணாக்காது தேநீரை அருந்தியவண்ணம் ஆங்கிலச் சொற்களை மனம் செய்ய ஆரம்பித்தாள்.

கெய்கோ எதிர்பார்த்திருந்த போட்டிப் பரீட்சையும் நெருங்கியது. யப்பானிய ஆரம்ப பாடசாலைகளின் இறுதி ஆண்டில் இத்தகைய போட்டிப் பரீட்சைகள் மூலம்தான்மாணாக்கரை தரம் பிரிப்பார்கள். எல்லோரும் விரும்பியபடி பல்கலைக் கழகத்துக்கோ தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கோ செல்வது இயலாத காரியம். இவர்களின் தலைவிதி இவ்வாறு ஆரம்ப பாடசாலைகளிலேயே தீர்மானிக்கப்படுவது முறைதானா என்ற கேள்விவந்த நாள் முதல் நளாயினியின் மூளையை குடையும் விடையங்களில் முதன்மையானது. இது குறித்து பல்கலைக்கழக அதிகார வட்டத்தினரிடமும் பேசியிருக்கிறாள். இருப்பினும் இதுபற்றிய நேர்மையானதும் தெளிவானதுமான விளக்கங்களை யாராலும் தர முடியவில்லை.

பரீட்சையை எதிர்நோக்கி கெய்கோ நித்திரையையும் மறந்து தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தாள். பாடங்களில் விளக்கம் கேட்க நளாயினியின் வீட்டுக்கும் அடிக்கடி வந்து போனாள். இதனால் இவர்களிடையே உள்ள நட்பு மேலும் கனிந்தது.

யப்பானிய சிறார்களில் அதிகமானோர் பரிட்ஷைக் காலங்களில் ஒருவகை மன அழுத்தங்களினால் பாதிக்கப் பட்டிருப்பர். பரீட்சை பற்றிய பயம் இயல்பாகவே கெய்கோவையும் பீடித்திருந்தது. இதனால் அவள் பரீட்சையில் வெற்றி பெற வேண்டுமெனநளாயினி தான் வணங்கும் இந்துக் கடவுள்கள் எல்லோரிடமும் வேண்டிக்கொண்டாள்.

பரிட்சை முடிந்தது!

செய்த உதவிக்கு நன்றி தெரிவித்து கெய்கோ தன் கைபடத் தயாரித்த அழகான வாழ்த்து மடல் ஒன்றைதங்கை சடகோவிடம் கொடுத்தனுப்பியிருந்தாள். மன அழுத்தங்களில் இருந்து விடுபட அவளுக்கு ஓய்வுதேவை என்ற எண்ணத்தில் நளாயினியும் அவளது வீட்டுக்கு போய் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

அன்று மாலை பல்கலைக்கழகம் போகவென நளாயினி வீதியில் இறங்கினாள். கெய்கோ வீட்டுவாசலில் அயலவர்கள் கூடி நிற்பது தெரிந்தது.

கெய்கோ போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்று விட்டாளோ…?

அறியும் ஆவலில் ‘கெய்கோ எங்கே…?’ என வாசல் நின்ற கெய்கோவின் தந்தை கமாடாவிடம் கேட்டாள். கமாடா எதுவும் பேசாது தலையைக் குனிந்து கொண்டார். கெய்கோவின் தம்பியை தன்மடியில் வைத்திருந்த கிமோனா அணிந்த யப்பானிய பெண் ஒருத்திநளாயினியை தனியாக அழைத்துச் சென்று விஷயத்தை சொன்னாள்.

பரீட்சையில் தோல்வியுற்றதால் கெய்கோஇரவு தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டாளாம். அவளின் உடலை அவளது தந்தை பணிபுரியும் தொழிற்சாலை நிர்வாகம் வழமைபோல அப்புறப்படுத்தி விட்டதாம். அவர்களே அனைத்து செலவுகளையும் பொறுப்பேற்றுச் செய்வார்களாம். இன்று மாலை சவஅடக்கம் நடைபெறும்’ என சகல விபரங்களையும் சொன்னாள்.

நளாயினிக்கு வாய்விட்டு அழவேண்டும் போல் இருந்தது. அடக்கிக் கொண்டாள். சிறிது நேர மௌனத்தின் பின் தன்னை சுதாகரித்துக் கொண்டு ‘தங்கை சடகோ எங்கே…?’ எனக் கேட்டாள்.

பாடசாலைக்கு சென்று விட்டாள்’என வெகு இயல்பாகவே அந்த யப்பானிய பெண்மணி பதிலளித்தாள்.

கெய்கோவின் முகத்தை ஒரு தடவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. எங்கே அவளது இறுதிச்சடங்கென தந்தை கமாடாவிடம் கேட்டாள்.

தொழிற்சாலைக்கு அருகிலுள்ள சவச் சாலையிலேஇன்று இரண்டாவது சிப்ட் (Shift) முடிந்தவுடன் நடைபெறும். வேலை முடிந்தவுடன் மாலை ஆறுமணிக்கு நான் சவ அடக்கத்துக்கு வந்துவிடுவேன். நீங்களும் அங்கு வாருங்கள்’ என்றார் கமாடா கண்களில் நீர் ததும்ப.

வழமைபோல இன்று மாலை சவ அடக்கத்தின் பின்னர்கெய்கோவின் பெயரும்இம்மாத தற்கொலைப் பட்டியலில் பத்தோடு பதினொன்றாக பதிவு செய்யப்படும். மறுகணம் யப்பானின் அதிநவீன இணையத்தில்உயிர் ஒன்று புள்ளி விபரக் கணக்காகிவிடும்.

(இந்தியா டுடே, 23 ஜூலை 2003)

 


No comments:

Post a Comment

.