அந்திமம்
ஆசி கந்தராஜா
அம்மாவிடம், ஒரு கொட்டைப் பெட்டி
இருந்தது. அதைச் செல்வச்சந்நிதி கோவில்,
தேர்த் திருவிழாவின் போது வாங்கியதாக ஞாபகம். அது, பனம் ‘சார்வோலை’யால், தட்டையாக, தனியான மூடியுடன்
பின்னப்பட்டு, பல வர்ணங்களில் சாயம்போட்ட குருத்தோலையால் பொத்தி, அழகு
படுத்தப்பட்டிருந்தது. அம்மா வாங்கிய கொட்டைப்
பெட்டியில், ஒன்றுக்குள் ஒன்றாகச்
செருகப்பட்ட நான்கு அறைகள் இருந்தன. அதன் உட்பகுதியில் சில்லறைகளும், பக்கவாட்டில் தாள் காசும் வைத்திருந்தார்.
அம்மா கணக்கில் கெட்டிக்காரி. பெரிய நெடும் பிரித்தல் கணக்கையும் சில நொடிகளில் மனதுக்குள் போட்டுவிடுவார். எத்தனையோ பணப் பிரச்சனைகளை, தனி ஆளாக எதிர் நோக்கிச் சமாளித்தவர். அவர் கருமியல்ல. எங்கே காசைப் பொத்திப் பிடிக்கவேணும், எங்கே விரிக்கவேணும், என அவருக்குத் தெரியும். ஆனால், வயோதிபம் வந்து, அவரது இயக்கம் தானாகக் குறைந்தபோது, காசு விஷயத்தில் அம்மாவிடம் எவ்வளவோ பெலவீனங்கள்!

