இந்துமதி ஆகிய நான்...!
ஆசி கந்தராஜா
மற்றவர்கள் என்னைப் பற்றி
ஒரு மாதிரியாகப் பேசுவதை நீங்கள்
கேட்டிருப்பீர்கள். இது குறித்து எனக்கு எந்தக் கவலையும் குழப்பமும் இல்லை. கையில் இருக்கும் அழுக்கை, கழுவிவிட்டுப் போவதில்லையா? அதுபோல அநியாயங்களையும், துரோகங்களையும், ஊதித் தள்ளி விட்டு நான், நானாக வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்.
இந்துமதி என்னுடைய பெயர். வசதியான, கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவள். கட்டுப்பாடு என்றால் அப்படி ஒரு அநியாய கட்டுப்பாடு. அப்பா சந்திரசேகர், நிர்வாக அதிகாரியாக அரசாங்கத்தில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர். இப்பொழுது முழு நேரமாக வீட்டில் அதிகாரம் செய்கிறார். அவர் சிரித்த நேரங்கள் குறைவு. முகத்தை எப்பொழுதும் சீரியஸ்ஸாக வைத்துக் கொள்வதால், சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பலருக்கு, அவருடன் பேசுவதற்குப் பயம். தன்னை எதிர்த்துப் பேசாதபடி உளவியல் ரீதியாக, என்னையும் அம்மாவையும், வீட்டில் தயார்ப் படுத்தி வைத்திருந்தார். அவர் செய்த ஒரே ஒரு நல்ல காரியம், என்னைப் பல்கலைக் கழகத்தில், அறிவியல் படிக்க விட்டதுதான்.

