அறிவியல் புனைகதை:
பலஸ்தீனியன் வீட்டுப்
பூனைகள்.
கடந்த பத்து வருடங்களாக சுந்தரம் மேட்டுக்குடிகள் வாழும்
குறிச்சியொன்றில் வசிக்கிறார். அறியப்பட்ட கண்வைத்தியரான அவர், செல்வந்தர்கள் வாழும்
புறநகர்ப் பகுதியில் வீடுவாங்கியது ஒன்றும் புதினமல்ல. அடுத்த வீட்டில், முப்பது ஆண்டுகளுக்கு
மேலாக யூதப்பெண்மணி நயோமி குடியிருக்கிறார். விசாலமான பல அறைகள் கொண்ட, மாளிகைபோன்ற அந்த
வீட்டில், அவர் தனியாள். அவருக்கு
வயது, அறுபதுக்குமேல்
இருக்கும். ஜேர்மனியில் அடொல்வ்
ஹிட்லரின் அடக்குமுறைகளுக்குத் தப்பி, இவரின் பெற்றோர் பெரும் செல்வத்துடன் சிட்னியில் வந்து குடியேறினார்களாம்.
இதற்குமேல் நயோமி பற்றி அந்த வீதியில் வசிப்பவர்களுக்குத் தெரியாது. அவரின்
வீட்டுக்கு எரும் வந்துபோகும் சிலமனுமில்லை. எப்போவாவது ஒருநாள், ஹிப்பா தொப்பி அணிந்த
ஆண்களும், தலைமுடியை மூடிமறைத்த பெண்களும்
வருவார்கள். நயோமிக்கு பார்வைக் குறைபாடு இருந்தது. கண்வைத்திய கிளினிக்கில்
நேரஒதுக்கீடு பெற நீண்டகாலம் எடுக்குமென்பதலால், நயோமி வைத்திய ஆலோசனை கேட்டு அவ்வப்போது சுந்தரத்திடம்
வருவார். வந்தாலும் உள்ளே வரமாட்டார். வெளிவாசலில் நின்றுகொள்வார்.
ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த ஒவ்வொரு
இனக்குழுவுக்கும் பெருநகரங்களில் தனித்தனியான
குறிச்சிகளுண்டு. இஸ்லாமியர்களும் மதரீதியாக சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுள்
கணிசமானோர் லெபனானியர்கள்,
துருக்கியர்கள், பலஸ்தீனியர்கள். சிட்னியில் ஸ்ட்ராத்பீல்ட் என்னும் இடத்தில் தமிழர்களும்
கூடிவாழ்ந்தார்கள். வசதிவாய்ப்புகள் பெருக, வேறு இடங்களில் கோவில்
கட்டி, அதைச்சூழ வீடுவாங்கி
வாழ்கிறார்கள்.
டாக்டர் சுந்தரம் பணிபுரியும் வைத்திய சாலையில், இருதய நோய் வைத்திய
நிபுணராகக் கடமையேற்றார்,
போலஸ். அவரது
முழுப்பெயர் வாய்க்குள் நுழையாது. லண்டனில் மருத்துவம் படித்து சிட்னிக்குப்
புலம்பெர்ந்த இவர், ஒரு பலஸ்தீனியர்.
மகப்பேறு மருத்துவரான இவரின் மனைவி, ஒரு ஆங்கிலேய வெள்ளைக்காரி. வீடு வாங்க இவர்கள்
ஆயத்தமானபோது விற்பனைக்குவந்தது, நயோமியின் வீட்டுக்கு அடுத்தவீடு. போலஸ் தம்பதிகள் அந்த வீட்டை வாங்குவதற்கு
சுந்தரம் காரணமானார்.
போலஸ் ஒரு பலஸ்தீனியர் என்பதை நயோமி எப்படியோ அறிந்துகொண்டார். இஸ்லாமியர்கள் செறிந்து வாழும் குறிச்சியில் வாழாமல், இவன் ஏன் இங்கு வந்தான்? என்ற வெப்பிசாரம் நயோமியின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தெரிந்தது. இதிலிருந்து ஆரம்பமாகியது மாமரப் பிரச்சனை.
சுந்தரத்தை ஒருநாள் கடைவீதியில் கண்ட நயோமி, யார்யார் எந்தெந்த
இடங்களில் வாழ்வதென்ற விவஸ்தையே இல்லாமல் போச்சு. எனது பெற்றோர் விலையுயர்ந்த
குறிச்சியில் வீடு வாங்கியதற்கும் அர்த்தமில்லாமல்ப்
போச்சு, என போலஸ் அடுத்த வீட்டுக்குக்
குடிவந்ததை நேரடியாகக் குறிப்பிடாமல், பொதுவாக கொமன்ட் அடித்தார். இவர்களிடையே இந்தளவுக்கு இனவெறுப்பு இருப்பதை
சுந்தரம் இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. கண் வைத்தியத்துக்குக்கு
அப்பால் அவருக்குத் தெரிந்தது, வீட்டுத்தோட்ட விவசாயம் மட்டுமே. அதனால், அன்றைய இரவுச் சாப்பாட்டின் பின்னர் யூத, பலஸ்தீன முரன்பாடுபற்றி, சிட்னி பாடசாலையொன்றின் வரலாற்று ஆசிரியரான மனைவியிடம் கேட்டார்.
இடியப்பச் சிக்கலான இந்த விஷயத்தை, சுந்தரத்துக்குப்
புரியும் வகையில் மனதுக்குள் கோர்வையாக்கிக்கொண்டு, மனைவி சொல்லத் துவங்கினார்.
1948-ல், இரண்டாவது உலகயுத்தம்
முடிவடைந்த காலமது!
அதுவரை பிரித்தானியர்களின் ஆளுகையின் கீழிருந்த
பலஸ்தீனப் பிரதேசத்தில், யூதர்களுக்கும்
அரபுக்களுக்கும் தனித்தனி நாடுகள் உருவாக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையில்
தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய உருவானதே இஸ்ரேல்!
அப்படியானால், அரபுக்களின் தேசம்?
ஐநாசபையில் அங்கம்வகித்த அரபு நாடுகள், முழு பலஸ்தீனப்
பிரதேசமும் எங்களுக்கு வேண்டும், அது அரேபியர்களுக்கு மட்டுமே உரியது, என வாதிட்டார்கள். இருப்பினும், சபையில் விடப்பட்ட வாக்கெடுப்பு முடிவின் பிரகாரம், யூதர்களுக்கான நாடு ஒன்று, உருவாக்கப்பட்டது.
ஐநாவின் இந்த முடிவையும் அமுலாக்கத்தையும்
தடுத்து நிறுத்துவோம் என்று அரபு
நாடுகள் போர்க்கொடி தூக்கியபோதிலும், அவர்களால் இஸ்ரேல், தனி நாடாவதைத் தடுக்க
முடியவில்லை.
ஐநாவில் அரபுநாடுகள் எதிர்த்திராவிட்டால், பலஸ்தீனம் என்னும்
சுதந்திரநாடு அப்போது உருவாகியிருக்குமா?
ஆம், அதுதான் உண்மை. அப்படியானதொரு சுதந்திர நாடுக்காகத்தான் இப்பொழுது சண்டை
பிடிக்கிறார்கள். அப்போதே அரபுநாடுகள் ஐநாவில் ஒத்துக்கொண்டிருந்தால், பலஸ்தீன் என்னும் நாடு 1948-ம் ஆண்டிலேயே
உருவாகியிருக்கும்.
அடடே, இது நம்மநாட்டுக் கதைமாதிரி இருக்கே. தருவதை வேண்டாமென முதலில்
மறுத்துவிட்டுப் பின்னர் அதைப் பெறுவற்குப் போராடுவதும் போர்புரிவதும், என இலங்கைத் தமிழர்களை
மனதில் வைத்து கொமன்ட் அடித்தார் சுந்தரம்.
மேசைமேலிருந்த நிலக்கடலையை எடுத்துக்
கொறித்தபடி சற்று நேரம் அமைதி காத்த மனைவி, தொடர்ந்தார். எழுபது சதவிகிதத்துக்கு அதிகமான யூதர்கள் வாழும் தற்போதைய
இஸ்ரேலில், இருபது சதவிகித
இஸ்லாமியர்களும் வாழ்ந்துவருகிறார்கள். அங்கிருக்கும் இஸ்லாமியர்களை யூதர்கள்
இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவதால், மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமிய நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு எதிராக நிற்கின்றன.
அப்போ, புனித பூமியான ஜெருசலேம்
யாருடையது? சுந்தரத்துக்கு எதிலும்
எப்போதும் அவசரம். அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளாட்டுக்கடி கடிப்பார்.
மத்திய கிழக்கில் நடந்த போரொன்றில், மேற்கு ஜெருசலேமைத்
தன்வசம் வைத்திருந்த இஸ்ரேல், ஜோர்டானிடமிருந்து கிழக்கு ஜெருசலேம் பகுதியையும் கைப்பற்றி, முழு ஜெருசலேம் நகரையும்
தனது தலைநகராகப் பிரகடனப் படுத்திக்கொண்டது
ஓஹோ, உசாரான நாடுதான்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பலஸ்தீனியர்கள், பலஸ்தீனம் தனி நாடானால், ஜெருசலேம்தான் தங்கள்
தலைநகர் என்றும் கிழக்கு ஜெருசலேமில் அமைந்திருக்கும் அல்-அக்சா மசூதிதான் மெக்கா, மதீனாவுக்குப் பிறகு, தமது மூன்றாவது பெரிய
புனிதத்தலம் என்றும் அறிவித்தார்கள்.
மனைவியின் உரையாடல் தொடர 'ம்' சேர்த்தார் சுந்தரம்.
இந்த அல்-அக்சா மசூதியைச் சுற்றியிருக்கும் 'வெஸ்ட் வால்' என்ற மேற்குச் சுவரை, யூதர்கள் புனிதத்தலமாகக்
கருதுகிறார்கள். இதனால் அடிக்கடி இங்கு மோதல்கள் வெடிக்கும்.
ஓ..!
ஜெருசலேமை மீண்டும் வென்றெடுக்க நினைக்கும்
பலஸ்தீன ஹமாஸ் படை, இஸ்ரேலுக்கு எதிராகப் பல
ஆண்டுகளாக ஈரானின் ஆதரவுடன் தாக்குதல் நடத்திவருகிறது. இரு தரப்பும் நீண்ட காலமாக
மோதி வருவதால், அங்கு குண்டு
வெடிப்புகளும், துப்பாக்கிச் சூடுகளும்
வழக்கமாகிவிட்டன. இதன் தாக்கம்தான் வெளிநாடுகளில் வாழும் யூத, பலஸ்தீனிய சமூகத்தினரின்
முறுகல்கள் என, ஒரு வரலாற்றுப் பாடமே
நடத்தி முடித்தார் சுந்தரத்தின் மனைவி.
காதுவழியாக ஒரு விஷயத்தைக் கேட்டால், அதுபற்றி இணையத்தில்
ஆராய்வது சுந்தரத்தின் சுபாவம். அடுத்தநாள்
வைத்தியசாலைக் கன்ரீனில் எதேச்சையாகப் போலஸ்ஸை சந்தித்தபோது, யூதர்களுக்கு இஸ்ரேலைப்
பிரித்துக்கொடுப்பதற்கு முன்னரே, மோசஸ் காலத்தில் யூதர்கள் அங்கு வாழ்ந்ததாக இணையம் சொல்கிறதே, என போலஸ்ஸை
ஆழம்பார்த்தார் சுந்தரம்.
மோசஸ் காலத்திலே காசாப்பகுதியில் யூதர்கள்
இருந்திருக்கலாம். ஆனால் ரோமானிய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தும் வசதி வாய்ப்பை நாடியும், எப்போதோ அவர்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் குடிபெயர்ந்துவிட, எஞ்சியிருந்தவர்கள்
அரபுகள் மட்டுமே. ஹிட்லரின் கொடுமைகளுக்கு அஞ்சி மீண்டும் யூதர்கள் திரும்பி வந்து
அந்த நிலப்பரப்பு எங்களுக்குச் சொந்தம் என்றால் அதில் என்ன நியாயம்? என்று சுந்தரத்துக்கு
ஏற்றவகையில் பதில் சொன்ன போலஸ், அதுபற்றி மேலும் பேச விரும்பாதவராக அங்கிருந்து அகன்றார்.
சிட்னியில் அது கோடை காலம்!
மாங்காய்கள் முத்திப் பழுக்கத் துவங்கின. ஒரு
சனிக்கிழமை காலை சில மாங்காய்கள் சகிதம் நயோமி வந்து சுந்தரத்தின்
கதவைத்தட்டினார். அவரது கையிலிருந்த மாங்காய்கள் குறண்டிச் சிறுத்து, கரடுமுரடான, தடித்த தோலுடன்
இருந்தன.
பக்கத்து வீட்டுப்
பலஸ்தீனியனின் பூனைகள் செய்த கைங்கரியத்தைப்பார். நல்ல இனிப்பான பெரிய மாங்காய்கள்
காய்த்த என் மாமரம், இந்த வருடம் இதைத்தான்
காய்த்திருக்கிறது, நீயேபார், வாயில் வைக்கமுடியாத
புளிப்பு, எனத் தான் கொண்டுவந்த
மாங்காய்களை சுந்தரத்தின் முகத்துக்கு நேரே நீட்டினார். சுந்தரம் வீட்டுத்தோட்டத்தில்
ஆர்வமுடையவர் என்பதும் பக்கத்துவீட்டு போலஸ் அவருடன் பணிபுரிபவர் என்பதுமே இந்த
முறைப்பாட்டுக்குக் காரணம்.
போலஸ்ஸின் வெள்ளைக்கார மனைவி செல்லப் பிராணிகளை
நேசிப்பவர். அவருக்கு வீட்டில் நாய் வளர்க்க விருப்பம். இஸ்லாமியரான கணவருக்கோ
நாய் ஆகாது. நாய், பன்றி என்பன அழுக்கான
மிருகங்கள் என்கிறது குரான். ஆனால் பூனை அவர்களுக்குத் தூய்மையான, புனிதமான மிருகம். இதனால், நாய்க்கும் சேர்த்து
வெவ்வேறு சைஸில் ஐந்து பூனைகளை வளர்த்தார். இவை குட்டிபோடும் சமயங்களில் இந்த
எண்ணிக்கை பெருகும். போலஸ்ஸின் மனைவியின் கைகளில் பூனைகள் விறாண்டிய காயம்
எப்போதும் இருக்கும். பூனைகளுடன்தான் அவர் தூங்குவதாக, போலஸ் சொல்லிச்
சிரிப்பான்.
பூனைக்கும் மாமரம் காய்ப்பதற்கும் என்ன தொடர்பு? மூளையைக் குழப்பி யோசித்தபடி, நயோமியின் முகத்தைப்
பார்த்தபடி நின்றார் சுந்தரம்.
எதற்கும் என்னுடன் வா, எனச் சுந்தரத்தைத் தன்
பின்வளவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் வாழ்ந்த பத்துவருட காலத்தில்
அன்றுதான் நயோமியின் பின்வளவுக்கு முதல் முறையாகச் சென்றிருக்கிறார். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் வாங்கிய
வீடுவளவென்பதால் பின்வளவு விசாலமாக இருந்தது. அங்கு உயர்ந்த சாதிப் புல்லு பதிக்கப்பட்டிருந்தது. சொட்டு நீர்ப்பாசனத்தின் கீழே பூமரங்களும்
பழமரங்களும் செழிப்பாக வளர்ந்து நின்றன. போலஸ்ஸின் வீட்டுப்பக்க வேலியருகே ஒரு
மாமரம் கிளைபரப்பி நின்றது. அதை நட்டு பத்து
வருடங்கள் இருக்கலாம். மண்ணைத் தொட்டபடி இருந்த அதன் கிளைக்கூடலின்
கீழ்ப்பகுதியில், குறண்டிய மாங்காய்கள் பெரும் எண்ணிக்கையில் பல்லிளித்தன.
கிளைக்கூடலின் உச்சியில் மாத்திரம் உருண்டு திரண்ட சில மாங்காய்கள்
தொங்கின.
சுந்தரத்துக்கு விஷயம் விளங்கிவிட்டது. இது
பூனையால் வந்ததல்ல என சுந்தரம் வாக்கியத்தை முடிக்கமுன்னரே மறித்து, என்னுடன் வா, எனச் சுந்தரத்தை
மாமரத்தடிக்கு கூட்டிக்கொண்டு போனார். மாமரக் கிளைக்கூடலின் கீழே படுத்திருந்த
பூனைகள் ஆளரவம் கேட்டவுடன் வேலிபாய்ந்து போலஸ் வளவுக்குள் ஒடித் தப்பின.
குனிந்து கீழேபார், உன் நண்பன் வீட்டுப்
பூனைகளின் வேலையை, எனக் கத்தினார் நயோமி.
சுந்தரத்துக்கு முள்ளந்தண்டுப் பிரச்சனை. குனிவது கஷ்டம். முழங்காலை நிலத்தில்
குத்திக் குனிந்து மாமரத்தின் கிளைக்கூடலின் கீழே பார்த்தார். ஒருவித துர்நாற்றம்
வீசியது. நிரந்தர சொட்டு நீர்ப்பாசனம் காரணமாக அந்த இடம் குளிர்மையாக இருந்தது.
கோடை வெய்யிலுக்கு குளிர்மையை நாடித்தான்
பூனைகள் வருகின்றன எனச் சுந்தரம் சொன்னதை காதில் வாங்காத நயோமி, மாமரக் கூடலின் கீழேயுள்ள
மண்ணை முள்ளுவிறாண்டியால் கிளறினார். மணம் தாங்கமுடியவில்லை. விட்டைவிட்டையாக பூனை
மலம் மண்ணுக்கு வெளியேவந்தது. சும்மா சொல்லப்படாது. கடையில் விற்கும் பூனைகளுக்கான
சாப்பாட்டை வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு மாமரத்துக்கு கீழிருந்த மண்ணை விறாண்டி தாராளமாக மலம் கழித்திருக்கின்றன. அவைதான் என்ன செய்யும்? போலஸ் வீட்டுப் பின்வளவு
முழுவதும் செங்கற்கள் பதித்திருக்கிறார்கள்!
ரின் உணவுகளைச் சாப்பிடும் பூனைமலத்தில்
வேண்டப்படாத மூலகங்கள் இருக்கலாம் எனவும் அதுவே மாமரத்தின் இயல்பை
மாற்றிவிட்டதாகவும் யாரோ நயோமிக்கு ஓதியிருக்கிறார்கள். அதை நம்பி போலஸ் மீது நகரசபையில் புகார் அளிதிருப்பதும் நயோமியின் கதைகள் மூலம் தெரிந்தது.
சுந்தரம் சற்று நிதானித்து, விஷயத்தை விளக்கத் துவங்கினார்.
மிஸ்ஸிஸ் நயோமி, உங்கள் மாமரம் ஒரு ஒட்டுக்கண்டு. அதாவது இரண்டு மாமரங்களின்
நல்ல இயல்புகளை ஒன்றுசேர்த்த ஒரு மரம்.
சுந்தரம் என்ன சொல்ல வருகிறார்? இதுக்கும் பூனைகள் மலம் கழிப்பதற்கும்
என்ன சம்மந்தம்? என்ற பாவனையில் இமைகளைச்
சுருக்கினார் நயோமி.
காடுகளில் வளரும் நல்ல வேர்த்தொகுதி கொண்ட மாமர
ஒட்டுக்கட்டையில், இனிப்பான பழம் தரும் மாமரத்தின் ஒட்டுத்தண்டை ஒட்டியிருக்கிறார்கள். இதனால் ஒட்டுத்
தண்டிலிருந்து வளரும் கிளைகளில் மட்டும் இனிப்பான மாங்காய் காய்க்கும். ஒட்டுச்சந்திப்புக்கு கீழே, நிலத்துக்கு மேலேயுள்ள
ஒட்டுக் கட்டையில் வளரும் கிளைகளில் காட்டு மாமரத்தின் இயல்புப்படி குறண்டல் காய்களே காய்க்கும். ஆனால் அதற்கு
நல்ல வேர்த்தொகுதி இருக்கும். உங்கள் மாமரக் கூடலின்
கீழ்ப்பகுதியில் குறண்டல் காய்களும் மேலே கொழுத்த பெரிய காய்களும்
காய்த்திருப்பதற்கு இதுதான் காரணம்.
இதுக்கு என்னசெய்ய வேணும் எனப் பணிந்து வந்தார்
நயோமி.
ஒட்டுக் கன்றுகளில் ஒட்டுச்சந்திப்புக்கு
கீழேயுள்ள ஒட்டுக்கட்டையில் கிளைகள் வளர்ந்தால் அதனை வெட்டி அகற்றிவிடவேண்டும்.
இது எல்லா மரங்களுக்கும் பொருந்தும்.
முந்தி இப்படியில்லையே, இந்தவருடம் மட்டும் ஏன்
இப்படி? என நியாயமானதொரு கேள்வியை
முன்வைத்தார் நயோமி.
நீங்கள் நினைப்பதுபோலல்லாமல் பூனை மலமும்
தாவரங்களுக்கு நல்ல சேதனப் பசளைதான் என்ற சுந்தரத்தின் மீது ஏளனப் பார்வையொன்றைப்
படரவிட்டார் நயோமி.
கடந்த காலங்களிலும்
ஒட்டுக்கட்டையில் அரும்புகள் தோன்றி அவை சிறிய கிளைகளாக
வளர்ந்திருக்கும். அதை நீங்கள் வெட்டி அகற்றியிருக்க வேண்டும். இந்த வருடம் முழுவதும்,
ஐந்து பூனைகளும்
மாமரத்தடியில் தாராளமாகக் கழித்த மலத்தோடு, நாள் முழுவதும் சொட்டும் நீரும் சேர, காட்டுமாமர ஒட்டுக்கட்டை
வீரியமாக கிளைவிட்டுப் பூத்துக்
காய்த்திருக்கு.
இதேமாதிரி நல்ல பழங்கள் தரும் ஒட்டுத்தண்டின்
கிளைகளும் காய்த்திருக்கலாமே?
காட்டு மரங்கள் இயல்பாகவே வீரியமாக வளர்வன.
அவற்றின் கிளைகளின் வளர்ச்சி ஒட்டுத்தண்டின் வளர்ச்சியை அமத்தித் தடுத்துவிடும்
என்றவர், சிறிய வாளால்
ஒட்டுக்கட்டையிலுள்ள கிளைகளை அரிந்தார் சுந்தரம். மாமரத்தின் அடிப்பகுதி காற்றோட்டமான வெளியாகியது!
சரி, உன்னை நம்பிறன். எதற்கும் பூனைகளைக் கட்டி வளர்க்கச்சொல் உன் நண்பனை, என்றார் நயோமி.
ஆடு, மாடு, நாய்களைக் கட்டி வளர்க்கலாம். பூனைகளை?
-ஆசி கந்தராஜா-
No comments:
Post a Comment