Sunday 31 January 2021

சிறுகதைத் தொகுதிகளின் முகவுரை

1.     பணச்சடங்கு: எம். ஏ. நுஃமான்

2.     கள்ளக் கணக்கு: அ முத்துலிங்கம்

3.     உயரப்பறக்கும் காகங்கள்: இந்திரா பார்த்தசாரதி

4.     பாவனை பேசலன்றி: பிரபஞ்சன்


1.     பணச்சடங்கு: எம். ஏ. நுஃமான்:

ஆசி கந்தராஜாவின் புனைகதைகள்

சி கந்தராஜா இன்றைய ஈழத்து புலம்பெயர் எழுத்துலகில் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். ஜேர்மனி, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தாவரவியல் விவசாயத் துறையில் கல்விகற்றவர். உலகின் பல்வேறு நாட்டுப் பல்கலைக் கழகங்களில் கற்பித்தவர். விவசாயத்துறை ஆலோசகராகப் பணியாற்றியவர், ஏராளமான சர்வதேச ஆய்வரங்குகளில் கலந்துகொண்டவர். அவ்வகையில் சர்வதேச அளவில் அறியப்பட்ட, அங்கீகாரம் பெற்ற ஓர் அறிவியல் அறிஞர், பூங்கனியியல், உயிரியல் தொழில்நுட்பத்துறைப் பேராசிரியர். கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவருபவர். இத்தகைய பின்புலமும், படைப்பாற்றலும் உள்ள ஒருவரின் தமிழ் இலக்கியத் துறைப் பிரவேசம் தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புதிய வளமும் வனப்பும் தந்திருக்கிறது என்பதில் ஐயம் இல்லை.

தமிழ் இலக்கியத்தில் புனைகதை, புனைவுக் கட்டுரை ஆகிய இரு துறைகளில் அவர் கால் பதித்திருக்கிறார். புனைகதைத் துறையில் பாவனை பேசலன்றி, உயரப் பறக்கும் காகங்கள், கள்ளக் கணக்கு  ஆகிய சிறுகதைத் தொகுதிகளும், கீதையடி நீ எனக்கு என்னும் குறுநாவல் தொகுதியும் ஏற்கனவே வெளிவந்துள்ளன. கறுத்தக் கொழும்பான், செல்லப் பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் என்பன இவரது புனைவுக் கட்டுரைத் தொகுதிகள்.

புனைவுக் கட்டுரை என்ற தொடர் கந்தராஜா மூலமே பிரபலம் பெற்றிருக்கின்றது எனலாம். ஆங்கிலத்தில் இதனை இமஜினேற்றிவ் எஸ்ஸே (Imaginative Essay) என்பார்கள். நமது பாடசாலைக் கல்வியில் இதனைக் கற்பனைக் கட்டுரை என்போம். ஏதாவது ஒரு பொருள் பற்றி புனைந்து எழுதுவது இவ்வகைப்படும். இதில் உண்மையும் கற்பனையும் கலந்து இருக்கும். ஒரு பேனையின் கதை, நான் ஜனாதிபதியானால், எனது சந்திரமண்டலப் பயணம் போன்ற தலைப்புகளில் நமது பள்ளிப்பருவத்தில் நாம் கட்டுரைகள் எழுதியிருப்போம். நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்க காலத்திலிருந்தே புனைவுக் கட்டுரைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. பாரதியின் தராசு, சிட்டுக்குருவி போன்றவற்றை உதாரணமாகச் சொல்லாம். புதுமைப்பித்தனின் திருக்குறள் குமரேசபிள்ளை பிறிதொரு உதாரணம்.

ஆசி கந்தராஜாவின் புனைவுக் கட்டுரைகள் நாம் பாடசாலைக் காலத்தில் எழுதிய கட்டுரைகள் போன்றவை அல்ல. பாரதி, புதுமைப்பித்தன் கட்டுரைகள் போன்றவையும் அல்ல. இவை உண்மையில் அறிவியல் கட்டுரைகள். அறிவியலை துறை சார்ந்த நிபுணர்களுக்காக அன்றி, பொதுமக்களுக்காக எளிமைப்படுத்தி சுவாரஸ்யமாக வாசிப்பதற்காகவும் அதேவேளை அறிவியல் உண்மைகளைப் புரிந்துகொள் வதற்காகவும் எழுதப்பட்ட கட்டுரைகள். இத்தகைய எளிமைப்படுத்திய அறிவியலை ஆங்கிலத்தில் பொப்யுலர் சயனஸ் (Popular Science) என்பார்கள். தமிழில் இதனை ஜனரஞ்சக அறிவியல் அல்லது வெகுஜன அறிவியல் எனலாம். மேலை நாடுகளில் ஜனரஞ்சக அறிவியல்துறை பெருவளர்ச்சி பெற்ற ஒரு துறை. அதற்கென்றே பல சஞ்சிகைகளும் ஏராளமான நூல்களும் வெளிவருகின்றன. பொப்யுலர் சயன்ஸ் மந்த்லி என்ற ஆங்கில சஞ்சிகை இவ்வகையில் புகழ் பெற்றது. 1960, 70 களில் இத்துறை சார்ந்த பல சோவியத் நூல்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்தன. நான் ஏன் என் தந்தையைப்போல் இருக்கிறேன்? என்ற மரபணு உயிரியல் தொடர்பான ஒரு சோவியத் நூலை 1970களின் தொடக்கத்தில் நான் வாசித்த ஞாபகம். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தமிழில் ஜனரஞ்சக அறிவியல் நூல்கள், கட்டுரைகள் என்பன பெருமளவில் இல்லாவிட்டாலும் ஓரளவு வெளிவந்திருக்கின்றன. கலைக்கதிர் என்ற ஒரு சஞ்சிகை இதற்காகவே வெளிவந்ததை நாம் அறிவோம். ஆயினும் இவையெல்லாம் பெரும்பாலும் எளிமைப்படுத்திய அறிவியலாக அமைந்தனவே தவிர, புனைவியல் சார்ந்த சுவாரஸ்யமான வாசிப்புக்கும் உரியவையாக அமையவில்லை எனலாம்.

ஜனரஞ்சக அறிவியலையும் புனைவுக் கட்டுரை வடிவத்தையும் ஒன்றிணைத்தமை ஆசி கந்தராஜாவின் எழுத்தின் தனித்தன்மை எனல் வேண்டும். குறிப்பாக விவசாயத் துறையில் மரபணு உயிரியல் தொழில்நுட்பச் செயற்பாடுகளை பொதுமக்கள் விளங்கிப் பயனடையும் வகையில் அன்றாட வாழ்க்கை அனுபவத்துடன் இணைத்து சொந்த அனுபவமாகவும் புனைகதை உத்தியைப் பயன்படுத்தியும் அவர் விளக்குகிறார். அவ்வகையில் ஒரு விஞ்ஞானியின் அறிவாற்றலும், ஒரு படைப்பாளியின் புனைவாற்றலும் ஒன்றிணைந்து உருவாக்கிய இக்கட்டுரைகள் தமிழில் ஒரு புதுவருகை எனலாம்.

ஆசிரியரின் துறைசார்ந்த அறிவு, பன்னாட்டு அனுபவம், யாழ்ப்பாணப் பண்பாடு பற்றிய கூருணர்வு, கற்பனை வளம், மொழியாற்றல் என்பன அவருடைய எழுத்துக்கு வலுவையும் வளத்தையும் தருகின்றன. விவசாயத் துறைசார்ந்த பொதுமக்கள், மாணவர்கள் மட்டுமன்றி பொது வாசகர்களும் படித்துப் பயனடைவதற்குரியவை இவரது புனைவுக் கட்டுரைகள். ஜனரஞ்சக அறிவியல், புனைவுக் கட்டுரை ஆகிய இரு துறைகளுக்கும் ஒரு தகுந்த முன்மாதிரியாகவும் இவரது கட்டுரைகள் அமைகின்றன.

-2-

இனி இவரது புனைகதைகளுக்கு வருவோம். இவரது புனைவுக் கட்டுரைகளுக்கும் புனைகதைகளுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு மெல்லியதுதான். இவரது புனைவுக் கட்டுரைகள் சில புனைகதைகள் போலவும், புனைகதைகள் சில புனைவுக் கட்டுரைகள் போலவும் மயக்கம் தருவதற்கு இந்த இரண்டுக்கும் இடையிலான இந்த மங்கலான இடைவெளியே காரணம் எனலாம். சமீபத்தில் வெளிவந்த காலம் 54 ஆவது இதழில் (ஜனவரி - 2020) பிரசுரமாகியுள்ள ”ஆசி கந்தராஜாவின் படைப்புலகம்” என்ற கட்டுரை இவ்விரு வகையான எழுத்துகளையும் ஒன்றாக நோக்குவது இந்த மயக்கம் காரணமாகவே எனலாம். ஆனால், கந்தராஜாவின் இருவகை எழுத்துகளுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பதைத் தேர்ந்த வாசகர்கள் தவறவிட முடியாது. அவரது புனைவுக் கட்டுரைகளில் அனுபவச் சித்திரிப்புகள் ஊடாக அறிவியல் விளக்கம் முனைப்பாக இருக்கும், அதவேளை, அவரது புனைகதைகளில் அனுபவச் சித்திரிப்பின் ஊடாக மனித உறவுச் சிக்கல்களும் மனித உணர்வு நெருக்கடிகளும் முனைப்பாக வெளிப்படும். ஆயினும் இருவகை எழுத்துகளிலும் சொல்லும் முறையும் மொழிநடையும் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும். இது அவரின் எழுத்தின் பொதுப்பண்பு எனலாம்.

இத்தொகுப்பில் 15 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் கந்தராஜாவின் முத்திரை பதித்த கதைகள். வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுபவை. பல கதைகள் மனதை அதிரவைப்பவை. இத்தொகுப்பில் உள்ள கதைகளை அவற்றின் கதைக்களத்தின் அடிப்படையில் மூன்று தொகுதிகளாக வகைப்படுத்தி நோக்கலாம். முதலாவது, யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டவை. இவ்வகையில் சாது மிரண்டால், இந்துமதி ஆகிய நான், நரசிம்மம் ஆகிய மூன்று கதைகளையும் சொல்லலாம். இரண்டாவது, ஈழத்தையும் புலம்பெயர்ந்த அவுஸ்திரேலியாவையும் களமாகக் கொண்டவை. இவை புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பேசுவன. இத்தகைய ஆறு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. மூன்றாவது, பிறநாட்டு அரசியல் பண்பாட்டுப் பின்னணியில் அமைந்தவை. இவை பெரும்பாலும் ஜோர்த்தான், லெபனான், ஜெருசலேம், ஈரான் நாட்டு வாழ்க்கை பற்றியவை. இத்தகைய ஆறு கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இக்கதைகள் எல்லாமே மனிதர்கள் எதிர்நோக்கும் சமூக, அரசியல், தனிமனித, பண்பாட்டுச் சிக்கல்களையும் இன்னல்களையும், நெருக்கடிகளையும் உணர்வு பூர்வமாகச் சித்திரிப்பவை.

இத்தொகுப்பில் உள்ள சாது மிரண்டால், இந்துமதி ஆகிய நான் ஆகிய இரண்டும் சற்று வித்தியாசமான கதைகள். நமது அன்றாட வாழ்க்கை அனுபவங்களுக்குள் பொதுவாக அகப்படாத, ஆனால் அகப்படக்கூடிய நிகழ்வுகளின் புனைவுகள். திருமண உறவையும் பாலியல் சிக்கல்களையும் பேசுபவை. 

தன்னை வஞ்சித்த மனைவியையும் அவளது கள்ளக் காதலனையும் பால்வினை நோயைத் தொற்றவைத்துப் பழிவாங்கிய அப்பாவியான பேரம்பலத்தையும், அவனது மனைவிக்கும் அவளது கள்ளக் காதலனுக்கும் ஊனமுற்றுப் பிறந்த பிறப்புச் சான்றிதழ் இல்லாத நாராயணனையும் பற்றிய கதை சாது மிரண்டால். பேரம்பலம் சௌக்கியத் திணைக்களத்தில் வேலை செய்பவன். அழகன் அல்ல. கிராமத்தில் அழகியும் கிசுகிசுப் பேச்சுக்கு ஆளானவளுமான அமிர்தவல்லியை அவன் கலியாணம் செய்ய நேர்கிறது. கணவனானாலும் அவன் தன்னை அணுகவிடாது அவனை ஒரு வேலைக்காரனைப் போலவே நடத்துகிறாள் அமிர்தவல்லி. எப்போதும் துப்பாக்கியுடன் திரியும், ஒரு இயக்கத்தின் பிராந்தியத் தலைவனான மலர்வண்ணனுடன் அவளுக்குக் கள்ளத்தொடர்பு ஏற்படுகின்றது. கணவன் வீட்டில் இருக்கும் போதே வந்துபோகக் கூடிய துப்பாக்கிப் பலம் அவனுக்கு இருக்கிறது. அவன்மூலம் அவள் கருவுறுகிறாள். அதை மறைப்பதற்காக அவள் பேரம்பலத்துடன் சேர முயல்கிறாள். அது அவனுக்கும் தெரிகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தன்னை வஞ்சித்தவளைப் பழிவாங்குவதற்றகாக சிபிலிஸ் நோயுடைய ஒரு விபச்சாரியைத் தேடிப்பிடித்து நோயைத் தொற்றிவந்து அதை அமிர்தவல்லிக்கும் அவள் மூலம் மலர்வண்ணனுக்கும் தொற்றவைக்கிறான். நோய் முற்றிய நிலையில் ஊனமுற்ற நாராயணனைப் பெற்றுவிட்டு அமிர்தவல்லி செத்துப்போகிறாள். மலர்வண்ணனை இயக்கம் ”மண்டையில் போடுகிறது”. ஒரு தொழில் பெறுவதற்காக ஊனமுற்ற காலோடு, பிறப்புச் சான்றிதழுக்காக அலைகிறான் நாராயணன்.

நம்பலாம் நடந்தது வகையைச் சேர்ந்த கதையல்ல இது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டமிட்டுப் பால்வினை நோயைத் தொற்றிவந்து அதை மற்றவருக்குத் தொற்றவைத்துப் பழிவாங்குவது சாத்தியம்தானா என்ற ஐயம் எனக்குள் எழுந்தது. நான் இணையத்தில் தகவல் தேடியபோது இந்நோய்க்கிருமியின் தொற்று வெளிப்படும் காலம் கிருமியின் வகையைப் பொறுத்து சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் அல்லது வருடங்களாகலாம் என்று அறிந்தேன். இவன் பயன்படுத்திய சிபிலிஸ் நோய் வெளிப்படுவதற்கு கிருமியின் வகையைப் பொறுத்து மூன்று வாரங்கள் முதல் இருபது வருடங்கள்கூட ஆகலாம் என்று தெரிகிறது. அதிஷ்டவசமாகவோ, துரதிஷ்டவசமாகவோ பேரம்பலம் தொற்றிக்கொண்டுவந்தது விரைவில் தொற்றக்கூடிய ஒருவகை என்று நாம் அமைதிகாணலாம். அப்பாவியான பேரம்பலத்துக்குத் தன்னை வஞ்சித்தவர்களைப் பழிவாங்குவதற்கு இருந்த ஒரே சுலபமான வழியும் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். தன் நண்பனிடம் அவன் இப்படித்தான் சொல்கிறான்

எனக்கு வேறு வழி தெரியல்லையடா. வாழ்க்கைபூரா என்னை ஏமாத்தி துரோகஞ் செய்தவளுக்கும், துப்பாக்கி வைத்திருந்த தைரியத்தில், நான் வீட்டில் இருக்கவே, மனைவியிடம் வந்துபோனவனுக்கும் தண்டனை குடுக்க என்னாலை முடிந்த வழி இதுதான்”

இந்தக் கதையில் எனக்கு முக்கியமானதாகப்படுவது, ஒரு இயக்கத்தின் பிராந்தியத் தலைவன் ஒருவனின் நடத்தை பற்றிய சித்திரம். ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் இத்தகைய விசயங்களைக் கையாண்டது குறைவு. அவ்வகையில் ஆயுதக் கலாசாரம் தனிமனித வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் விளையாடி இருக்கிறது என்பது பற்றிய ஒரு விமர்சனமாகவும் இக்கதையை வாசிக்கலாம்.

துரதிஷ்டவசமாக ஆண்மையற்ற ஒருவனைத் திருமணம் செய்ய நேர்ந்த இந்துமதி, கணவனின் திருப்திக்காக, கன்னி கழியாமலே யாரோ ஒருவனின் கருவைச் சுமந்து செயற்கை முறையில் ஒரு குழந்தையைப் பெற்றறெடுப்பதும், ஒரு கணநேர உணர்வு மயக்கத்தில் பிறிதொருவனுடன் கூடி பிறிதொரு குழந்தைக்குத் தாயாக நேர்வதும் அதன்மூலம் அவளுடையவாழ்வு திசைமாறிப்போவதும் பற்றியது இந்துமதி ஆகிய நான். சமூக நியமங்களின் சவாலை அவள் துணிச்சலுடன் எதிர்கொள்வதை கதை பேசுகிறது. நரசிம்மம் ஈழப் போராட்டத்தின் இறுதி யுத்தத்தின் பின்விளைவுகளின் வலியைப் பேசுகின்றது. புலிகள் இயக்கத்தில் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய புனிதவதி யுத்தமுடிவில் கைதுசெய்யப்பட்டு அவளுடைய உடல் வனப்புக் காரணமாக இராணுவ முகாமில் வைக்கப்படுகிறாள். இராணுவத்தினரால் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறாள். அதன்மூலம் அவளுக்கு ஒரு மகன். அவனுடன் அவள் வாழ்வை எதிர்கொள்வதில் அவள் அனுபவிக்கும் வலி. நாமும் அந்த வலியை உணரமுடிகின்றது. சிங்கள, தமிழ்த் தேசிய முரண்பாட்டுப் பின்னணியில் ஆசிரியர் எழுதிய முதலாவது கதையாக இது இருக்கலாம் என்று நினைக்கின்றேன். நரசிம்மம் இக்கதையில் ஒரு குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. புனிதவதி என்ற பெயரையும் ஆசிரியர் காரணத்துடன்தான் பயன்படுத்துகிறார் என்று கருதலாம்.

 -3-

இத்தொகுதியில் உள்ள அந்திமம், எதிலீன் என்னும் ஹோமோன் வாயு, வேதியின் விளையாட்டு, சாத்திரம் உண்டோடி, முகமூடி மனிதர்கள், பணச் சடங்கு ஆகியவை யாழ்ப்பாணத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை பற்றிப் பேசுகின்றன. புலம்பெயர் தமிழர் மத்தியில் காணப்படும் பண்பாட்டு அந்நியமாதல், பாலியல் சிக்கல்கள், கௌரவ வேட்கை, கலியாண வேட்டை போன்ற பல்வேறு அம்சங்களை இக்கதைகள் கருப்பொருளாகக் கொண்டுள்ளன. பல்வேறு வகையான மனித ஆளுமைகளையும் உணர்வுச் சிக்கல்களையும் இக்கதைகள் சித்திரிக்கின்றன. எதிலீன் என்னும் ஹோமோன் வாயு யாழ்ப்பாணக் கிராமம் ஒன்றிலிருந்து சிட்னிக்குப் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை அநுபவத்தைப் பேசும் சுவாரஸ்யமான, ஆச்சரியமூட்டும் கதைப்பின்னலைக் கொண்ட அதேவேளை மனித உறவுகள், உணர்வுகளின் இழிவுகள், மேன்மைகள் பற்றிய உருக்கமான கதை. வேதி விளையாட்டு திருமணச் சந்தையில் யாழ்ப்பாணப் பண்பாட்டுக்கும் புலம்பெயர்ந்தவர்களின் அவுஸ்திரேலிய கலப்புப் பண்பாட்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புலம்பெயர்ந்து வாழும் முதியவர்களின் நோக்குநிலையில் சுவாரஸ்யமாக விபரிக்கின்றது. சாத்திரம் உண்டோடி பல்கலைக்கழகத்தில் படிக்கும் வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகள் உட்பட நான்கு பிள்ளைகளுக்குத் தகப்பனான. ஐம்பது வயதைத் தண்டிய அவுஸ்திரேலியப் பிரஜையான சுந்தரமூர்த்தி மனைவியின் “பீரியட்“ தள்ளிப்போவதனால் அடையும் பதற்றத்தை விபரிக்கும் கதை. கதைமுடிவில் வாசகருக்கு ஒரு நமுட்டுச் சிரிப்பு வருவதைத் தவிக்கமுடியாது.  நமது சமூகச் சூழலில் வயதான கணவர்களுக்கு ஏற்படக்கூடிய அனுபவம்தான் இது. யாழ்ப்பாணப் பணச்சடங்குப் பண்பாடு அவுஸ்திரேலியாவரை எவ்வாறு வியாபித்திருக்கின்றது என்பதை விபரிக்கும் கதைமட்டுமல்ல பணச்சடங்கு. அதைச் சொல்வதன் ஊடாக யாழ்ப்பாணத்தில் தன்வீட்டில் தொட்டாட்டு வேலைசெய்த வள்ளியம்மையுடன் தான் ஆடிய விளையாட்டின் அறுவடையை அவுஸ்திரேலியாவில் கண்டபோது நாகலிங்கம் மாஸ்டருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை விபரிக்கும் கதை.

ஆசிரியரின் கீதயடி நீ எனக்கு என்னும் குறுநாவல் தொகுதியில் திரிவேணி சங்கமம் என்னும் தலைப்பில் ஒரு குறுநாவல் இடம்பெற்றுள்ளது. விவேகமும் திறமையும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேட்கையும் கொண்ட மூன்று இளைஞர்களின் எதிர்காலம் தங்கள் வாழ்வில் குறுக்கிட்ட பெண்களின் தொடர்பால் எதிர்பாராத வகையில் நிலைகுலைந்து சிறையில் கழியநேர்ந்த துர்ப்பாக்கிய நிலையை விபரிக்கும் குறுநாவல் அது. அந்த மூன்று இளைஞர்களின் கதைகளையும் தனித்தனியே, சற்று மாற்றியும் விரித்தும் எழுதிய மூன்று சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. காதல் ஒருவனைக் கைப்பிடித்து, ஆண்சுகம், முகமூடி மனிதர்கள். என்பன அவை. முதல் இரண்டும் பிறநாட்டு மனிதர்களையும், மூன்றாவது புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களையும் பற்றியவை.

ஈரானிலிருந்து இரண்டு குழந்தைகளுடன் அவுஸ்திரேலியாவுக்கு உயர்கல்வி  கற்க வந்த அமீர் முகம்மது அவனது மனைவி றொஸ்நாக் ஆகிய இருவரும் இருவேறு கலாசாரங்களை எதிர்கொண்ட விதத்தையும் அதன் விளைவுகளையும் பற்றியது காதல் ஒருவனைக் கைப்பிடித்து என்ற கதை. திரிவேணி சங்கமத்தில் வரும் றொஸ்நாக் திறந்த பண்பாட்டின் சீரழிவுக்கு ஆளானவளாகச் சித்திரிக்கப்பட்டிருப்பாள், ஆனால் இக்கதையில் வரும் றொஸ்நாக் மேற்குலகின் பெண்ணுரிமை அம்சங்களைத் தழுவிக்கொண்ட அதேவேளை, இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களிலிருந்து வழுவாதவளாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறாள். பாலியலும் மதமும் பண்பாடும் தனிமனிதர்களின் வாழ்வில் ஆடும் ஆட்டத்தைப் பற்றியது இக்கதை என்றால், ஆண்சுகம் என்பது ”பெண்களின் உடலில் சுரக்கும் பாலியல் ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மையால் ஏற்படும் ஒருவகைப்” பாலியல் வேட்கையால் (Nymphomania) பாதிக்கப்பட்ட தன் காதலி மேரி, அவளுடைய சகோதரி லீசா ஆகியோரின் தொடர்பினால் அநியாயமாக விபத்துக்குள்ளாகி இறந்துபோகும் ரோனியின் கதை. ரோனியின் மரணம் விதிவசமானது என்றுதான் சொல்லவேண்டும். மிகவும் அரிதான ஒரு  உளவியல் நோயை மையமாகக் கொண்டு ஆசிரியர் இக்கதையைப் புனைந்திருக்கிறார். இவ்விரு கதைகளையும் விட முகமூடி மனிதர்கள் வாசகர்களை மிகவும் பாதிக்கக்கூடியது. புலம்பெயர்ந்த தமிழர்களின் சமூக, தனிமனித நடத்தை பற்றிய ஒரு தீவிரமான விமர்சனமாக இக்கதையை வாசிக்கலாம். தம்பலகாமத்தில் கப்பம் கொடுக்க மறுத்த காரணத்தினால் போராளிக் குழு ஒன்றினால் வீடு எரிக்கப்பட்டு, தாயும் தகப்பனும் கொல்லப்பட்டடு அநாதையான ஒரு பையன். தனது திறமையினாலும் ஆசிரியர்களின் உதவியினாலும் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சையில் தேசிய நிலையில் முதலிடத்தில் சித்திபெற்று அவுஸ்திரேலிய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியாவில் மருத்துவக் கல்வி பயிலவந்து புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பம் ஒன்றின் மாப்பிள்ளை வேட்டையில் அகப்பட்டு சிறைசெல்ல நேர்ந்து சீரழிந்த கதை இது. குரூரமான சுயநலத்துக்கு ஆட்பட்டு மனிதத் தன்மையை இழந்துபோன சமூகத்தைப் பார்த்து இதற்கு யார் காரணம் என்று முகத்தில் அறைந்தாற்போல் கேட்கிறது இந்தக் கதை.

 -4-

அ. முத்துலிங்கம் போல் ஆசி கந்தராஜாவும் பல நாடுகள் சுற்றியவர். அந்த அநுபவ வளத்தைத் தமிழ்ப் புனைகதைக்குள் கொண்டுவந்தவர். இத்தொகுப்பில் உள்ள ஆண் குழந்தை, எதிரியுடன் படுத்தவள், கையதுகொண்டு மெய்யது பொத்தி, தலைமுறை தாண்டிய காயங்கள் முதலியவை அத்தகையன. ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் முக்கியமானவை.

பெண்ணின் கருப்பையில் விருத்தியுறும் கருமுளையம் ஆணாகவா அல்லது பெண்ணாகவா விருத்தியுறவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது ஆணின் விந்தணுக்களில் உள்ள குரோமோசோம்களே” என்ற அறிவியல் உண்மையை நிரூபிப்பதுபோல் அமைகின்றது ஆண் குழந்தை என்ற கதை. ஜோர்தானிய பலதார மணப் பண்பாட்டுப் பின்னணியில் அமைந்த இக்கதையில் தொடர்ச்சியாகப் பெண்குழந்தைகளுக்கே தகப்பனான யூசூப்பின் நான்காவது மனைவி நீனாவும் பெண்குழந்தை ஒன்றையே பெற்றெடுக்கிறாள். தனக்கு இன்னும் ஒரு பெண் பிறந்தால் தன்னுடைய இடத்துக்கு இன்னொருத்தி வந்துவிடுவாள் என்ற பயம் அவளுக்கு. ஆனால் அதிஷ்டவசமாக அடுத்ததாக அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. யூசூப் அதைப் பெரிதாகக் கொண்டாடுகிறான். ஆனால் தொடர்ந்தும் ஆண்குழந்தையே பெறும் யூசூப்பின் தம்பிதான் அதற்குக் காரணம் என்பதாகக் கதை முடிகிறது. அலிக்குத் தொடர்ந்து ஆண் குழந்தைகளும் யூசூப்புக்குத் தொடர்ந்து பெண் குழந்தைகளும் பிறப்பதுதான் இதில் விந்தை. இதற்கு ஏதும் விஞ்ஞான விளக்கம் இருக்கக் கூடும்.

பலஸ்தீனியனைத் திருமணம் செய்த ஒரு யூதப் பெண் ஜெருசலேத்தில் எதிர்நோக்கும் சமூக வெறுப்பை எதிரியுடன் படுத்தவள் உருக்கமாகச் சித்திரிக்கிறது. இலங்கையின் இனவாதச் சூழலில் மாற்றுத் திருமணம் செய்த பெண்களை இக்கதை நினைவுபடுத்தலாம். சிரிய யுத்தத்தால் இடம்பெயர்ந்து லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் அலையும் படித்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களைப்பற்றிய உருக்கமான கதை கையதுகொண்டு மெய்யது பொத்தி. நூறு அண்டுகளுக்கு முன் ஒட்டமான் சாம்ராச்சியத்தின்கீழ் துருக்கியர்களால் இன அழிப்புக்கு உள்ளான ஆர்மீனியர்களின் வழித்தோன்றலான ஹறூத் என்னும் ஆர்மீனிய இளைஞன் இன்னும் சுமந்துதிரியும் பழிவாங்கும் தேசியவாத உணர்வைப் பேசுகிறது தலைமுறை தாண்டிய காயங்கள் என்ற கதை. இன அழிப்புக்கு உள்ளான ஈழத்துத் தமிழரான கதைசொல்லி ஹறூத்தின் இன உணர்வினால் நெகிழ்ந்துபோகிறார். ”ஹறூத் என் ஆசான்போன்று நிமிர்ந்து நிற்பதை உணர்ந்த என் உடல் குறுகியது” எனக் கதையை முடிக்கிறார் கதைசொல்லி.

-5-

ஆசி கந்தராஜா ஒரு எளிமையான கதைசொல்லி. நவீனவாதப் பொறிக்குள் சிக்காதவர். தனக்கென்ற ஒரு நேரடியான கதைசொல்லும் பாணியை உருவாக்கிக்கொண்டவர்.. பெரும்பாலான கதைகளில் அவரே கதைசொல்லியாகவும் அமைகிறார். பெரும்பாலான பாத்திரங்கள் கதைசொல்லியோடு நெருக்கமான உறவுடையவை. அதனால் அவர் சொல்லும் கதைகள் அவரது சொந்த அநனுபவங்கள்தான் என்ற ஒரு பிரமையை வாசகருள் ஏற்படுத்துகின்றன. அவை ஒவ்வொன்றும் அப்படியே உண்மை அனுபவங்களாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், வாழ்க்கையின் உண்மைகளைப்பற்றிப் பேசுபவை. பல்வேறு வகையான மனித ஆளுமைகளை, பல்வேறு வகையான பண்பாடுகளை, சமூக நெருக்கடிகளை, மனிதர்களின் உயர்வுகளை, வீழ்ச்சிகளைப் பேசுபவை அதனால் அவருடைய கதைகள் நமக்குள்.உண்மை அனுபவங்களாக இறங்குகின்றன.

மானுடம் இவ்வளவு தாழ்ந்ததை நான் என்றுமே அனுபவித்ததில்லை” என்பது பாவனை பேசலன்றி என்ற அவரது குறுநாவலில் வரும் ஒரு வசனம். அவருடைய பெரும்பாலான கதைகளில் மானுடத்தின் இந்த வீழ்ச்சியை நாம் காண்கின்றேம். மனித வாழ்க்கை பற்றிய அவருடைய விமர்சனமாக நாம் இவற்றைக் கொள்ளவேண்டும். மானுட மேன்மையில் அவருக்குள்ள அக்கறையின் வெளிப்பாடாகவே இந்த விமர்சனத்தை நாம் கருதவேண்டும். இலக்கியம் போதனைக்கான ஒரு கருவியல்ல, பதிலாக மனித வாழ்வைப் புரிந்துகொளவதற்கான ஒரு சாதனம். ஆசி கந்தராஜாவின் சில கதைகளில் போதனை அல்லது பிரசார நோக்கு சற்று முனைப்பாகத் தெரிந்தாலும், பொதுவாக அவரது கதைகள் எல்லாமே வாழ்க்கை பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவன.

இத்தகைய இன்னும் பல படைப்புகளை அவர் நமக்குத் தருவார் என்று நம்பலாம்.

எம். ஏ. நுஃமான்

பேராசிரியர்

ஹீறஸ்ஸகல, கண்டி, இலங்கை

13.04.2020

 

 

2. கள்ளக் கணக்கு: அ முத்துலிங்கம்

இரட்டிப்பு மகிழ்ச்சி

ன்னை நேர்காணல் செய்தபோது பத்திரிகையாளர் ஒரு கேள்வி கேட்டார். ’உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?’ நான் ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் ‘கார்ல் இயக்னெம்மா’ என்று பதில் கூறினேன். கேட்டவருக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படி ஓர் எழுத்தாளரை அவர் கேள்விப்பட்டதே கிடையாது.

இவர் ஓர் அமெரிக்க விஞ்ஞானி, இயந்திரவியல் பேராசிரியர். இயந்திரவியல் ஆராய்ச்சிகளில் மும்முரமாக ஈடுபடும் அதே நேரம் சிறுகதைகளும் எழுதுவார். அவருடைய சிறுகதைகள் உயரிய விருதுகள் பெற்றுள்ளன. அவர் என்னை ஈர்த்ததற்கு காரணம் அவருடைய கதைகளில் விஞ்ஞானமும், கணிதமும், இயற்பியலும் ஏதோவிதத்தில் பாத்திரமாக கலந்திருக்கும். சாதாரண வாசகருக்கு புரியும்படி விஞ்ஞான தத்துவங்கள் கிடைக்கும். கதையை படித்த சிலநாட்களில் மறந்து போனால்கூட அதிலிருந்து கிடைத்த விஞ்ஞான அறிவு என்னுடனேயே தங்கிவிடும். பல ஆயிரம் மைல்கள் பிரயாணம் செய்து இவரை நான் சந்தித்திருக்கிறேன். தீவிரமான ஆரய்ச்சிகளுக்கு நடுவே இரண்டு பாதி சிறுகதைகளும் அவர் மேசைமேல் கிடந்தன. ஆராய்ச்சிகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிறுகதைகளை எழுதுகிறார்.

ஒரு துறையில் பிரபலமானவர்கள் சிறுகதை எழுதுவது குறைவு. அதிலும் தமிழில் விஞ்ஞானிகள் யாராவது சிறுகதை எழுதுகிறார்களோ என்றால் அந்த விவரம் என்னிடம் இல்லை. எனக்குத் தெரிந்து சிறுகதைகள் தொடர்ந்து எழுதும் தமிழ் விஞ்ஞானி ஆசி. கந்தராஜாதான். இவர் உயர் கல்வி கற்க இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து அங்கே குடியேறியவர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பூங்கனியியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப பேராசிரியராக சிட்னி நகரில், மேற்கு சிட்னிப் பல்கலைக் கழகத்தில் பணி புரிகிறார். அறிவியல் ஆலோசகராக பலநாடுகளுக்கு பயணித்து அவர்கள் ஆராய்ச்சிகளுக்கு உதவி புரிந்திருக்கிறார். உயர் ஆராய்ச்சிகளில் கிடைக்கக்கூடிய விஞ்ஞான அறிவும் பலநாட்டு மக்களின் வெவ்வேறு அனுபவங்களும் இவரின் கதைகளில் விரவிக் கிடப்பதைக் காணலாம்.

இது இவருடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு, ’கள்ளக் கணக்கு’ என்ற தலைப்புடன் வரும் இந்த தொகுதியில் 13 கதைகள் உள்ளன. யப்பான், அவுஸ்திரேலியா, உகண்டா, லெபானன், இலங்கை, தென் கொரியா, இந்தியா, சீனா, வங்காளதேசம் என ஒன்பது நாடுகளின் பின்புலத்தில் இந்தச் சிறுகதைகள் புனையப்பட்டிருக்கின்றன. சில கதைகள் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா என மூன்று நாடுகளை இணைத்தபடி இருக்கின்றன. இந்தக் கதைகளில் எனக்கு இருக்கும் ஈர்ப்பு என்ன வென்றால் இவை தனிய விஞ்ஞானம் பற்றி பேசுபவை அல்ல. பல்வேறு நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், வரலாறு போன்றவற்றிலும் எங்களுக்கு பரிச்சயம் ஏற்பட வைக்கின்றன. புத்தகத்தை படித்து முடிக்கும்போது ஒன்பது நாடுகளுக்கு பயணம் செய்து திரும்பியது போன்ற நிறைவு கிடைக்கிறது. விஞ்ஞானமும் பயணமும் இணைந்து புனையப்பட்ட சிறுகதைகளை நான் படித்ததே இல்லை. அந்த வகையில் இந்த தொகுப்பு புதுமையானது, சிறப்பானது, இரட்டிப்பு மகிழ்ச்சி தருவது.

சிறுகதைகளின் தன்மை பற்றி நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணத்திற்கு இரண்டே இரண்டு சிறுகதைகளைப் பார்க்கலாம். எத்லீன் வாயு சம்பந்தப்பட்ட சிறுகதை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி அவுஸ்திரேலியாவில் முடிகிறது. யாழ்ப்பாணத்தில் கணவர் சந்தைக்குப் போய் காய்கறி வாங்கிவருகிறார். மனைவி கனகம் அவரிடம் திருப்பி திருப்பி ஒரு விசயம் சொல்லி அனுப்புகிறார். ’வெண்டைக்காயை பார்த்து வாங்குங்கோ. முற்றலாக வாங்கவேண்டாம்.’ காய்கறி வந்ததும் கனகம் ஆராய்கிறார். எல்லாமே முற்றல். அவர் கணவரை தாறு மாறாகத் திட்டுகிறார். அவமானம் பொறுக்காமல் மனிதர் தற்கொலை செய்துகொள்கிறார்.

அவர்களுடைய ஒரே மகள் பூங்கொடி அழகானவள். தோட்டத்திலே எடுபிடியாக வேலைசெய்த இராசதுரை அவளுக்கு காதல் கடிதம் கொடுத்து பிடிபட்டுவிடுகிறான். அவனை வேலையிலிருந்து துரத்துகிறார்கள். போரில் மக்கள் இடம்பெயர்ந்தபோது இரண்டு குடும்பங்களும் அவுஸ்திரேலியா வந்து சேருகின்றன. பூங்கொடியின் கணவருக்கு மனச் சிதைவு ஏற்பட்டதால் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையே பிரச்சினையுள்ளதாக மாறிவிடுகிறது. இராசதுரை படித்து மேல் நிலையில் இருக்கிறான். அவனிடம் உள்ள விவாசாயப் பண்ணை லாபம் ஈட்டுகிறது. பண்ணையில் வாழைப்பழ வியாபாரம் முக்கியம். செயற்கை முறையில் எத்லீன் வாயுவினால் பழமாக்கப்பட்ட வாழைப்பழங்கள் தினம் தினம் நூறு லாரிகளில் விநியோகம் ஆகின்றன.

இராசதுரை தான் முன்னாள் காதலித்த பூங்கொடியின் வறுமை நிலையை பார்த்து இரங்கி அவளுக்கும் கணவருக்கும் தன் தொழிற்சாலையில் வேலை போட்டுக் கொடுக்கிறார். அந்தச் சமயம் எல்லோருக்கும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. பூங்கொடியின் அப்பாவின் தற்கொலை. முப்பது வருடங்களுக்கு முன்னர் ஓர் அப்பாவி மனிதர் யாழ்ப்பாணத்தில் ஏன் தூக்குப்போட்டு இறந்து போனார் என்ற மர்மம் 8,800 கி.மீட்டர் தள்ளி இருக்கும் சிட்னி நகரில் விடுவிக்கப்படுகிறது. விஞ்ஞானமும் காதலும் கருணையும் அகங்காரமும் பின்னிப் பிணைந்த கதை.

மனதில் நிற்கும் இன்னொரு கதை தென்கொரியாவில் நடக்கிறது. அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு கம்பனியில் உயர்பதவி வகிக்கும் சாம்பசிவம் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட தென் கொரியா பயணமாகிறார். ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் தென் கொரிய கம்பனி அதிபர் பிரத்தியேகமான விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார். ஆடம்பரமான அலங்கார மேசையில் அவர்கள் அமர்ந்திருக்க பணியாட்கள் அவர்களுக்கு முன்னாலே தீ மூட்டி பாத்திரங்களில் வேகவைத்த இறைச்சி வகைகளை பரிமாறுகிறார்கள். சாம்பசிவம் கொரிய விருந்தோம்பலை வியந்தபடி ரசித்து உண்கிறார். பக்கத்திலிருந்தவர் என்னவிதமான உணவு, எப்படி தயாரிக்கப்பட்டது என்ற விளக்கத்தை அவ்வப்போது அளிக்கிறார். ’இது என்ன சாலட் இலையில் வாட்டிய இறைச்சி வருகிறது?’ என்று கேட்கிறார் சாம்பசிவம். அவர் ’கொரிய முறைப்படி உன்னதமாகத் தயாரித்த நாய் இறைச்சி’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்கிறார். சாம்பசிவம் அதிர்ந்து போகிறார். விருந்து கொடுக்கும் தலைவரை அவமதிப்பதுபோல ஒன்றும் செய்துவிடக்கூடாது என்பதால் எச்சரிக்கையாக உண்பதுபோல பாவனை செய்கிறார். விருந்து ஒருமாதிரி முடிவுக்கு வருகிறது. அடுத்தநாள் அதிகாலை விமானம் பிடித்து அவுஸ்திரேலியா வந்து சேர்கிறார். வழக்கமாக அவர் வீட்டினுள் காலடி வைக்கும்போது அவர் வளர்ப்பு நாய் பாய்ந்து வந்து அவரை வரவேற்கும். அன்று அது வரவில்லை. அவர் தேடிப்போனாலும் அது ஒதுங்கியே நிற்கிறது. மறு நாள் காலை அது வீட்டை விட்டு ஓடிப்போகிறது.

சிறுகதையைப் பற்றி பலபேர் பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு சிறுகதையில் இருந்து சிறுகதையை கழித்த பின் எது மிஞ்சுகிறதோ அதைத்தான் நாம் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறோம். புதுமைப்பித்தனுடைய பொய்க்குதிரையை யார் மறக்க முடியும்? கதையை மறந்தாலும் திருவல்லிக்கேணியையும், டிராம் வண்டியையும், டிராமுக்கு கொடுக்காமல் சேமித்த ஓரணாவில் மனைவிக்கு பூ வாங்கியதையும் நினைவிலிருந்து அழிக்கமுடியாது. புறநானூறில் ஒரு பாடல். ஆவூர் மூலங்கிழார் பாடியது. அரசனுடைய அரண்மனையை வர்ணிக்கிறார் புலவர். ’திங்களும் நுழையா எந்திரப் படு புழை’ என்று வருகிறது. சந்திரன் கூட நுழைய முடியாத கட்டுக் காவலுடன் அரண்மனை இருக்கிறது. கவிதையை ரசித்து முடிந்த பின்னர் மூளையிலே ஒன்று தோன்றுகிறது. 2000 வருடங்களுக்கு முன்னரே எந்திரத்தில் இயங்கும் வாசல் கதவுகள் இருந்திருக்கின்றன.

இலங்கையிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்து ஏற்காடு தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்கிறான் ஒருவன். இலங்கையில் அவனை ’இந்தியாக்காரன்’ என்று இழிவு படுத்துகிறார்கள். இந்தியாவிலோ ’சிலோன்காரன்’ என்று துரத்துகிறார்கள். சீனாவில் கள்ளக் கணக்குக் காட்டி விருந்தாளியின் பணத்தை உதவியாளர் ஒருவர் கைப்பற்றுகிறார். ஆப்பிரிக்காவில் ஒரு பெண் காதலனை அடைவதற்காக தன் உடலை விற்று பணம் சேர்க்கிறாள். யப்பானிலே மிக நவீனமான வாழ்க்கை முறையை அவர்கள் பின்பற்றினாலும் ஆயிரம் வருடங்கள் பழமையான மணிச்சட்டத்தை கணக்கிடுவதற்கு இன்றும் பாவிக்கிறார்கள். அத்துடன் பழமை பேணுவது முக்கியம் என்றும் சொல்கிறார்கள். சிறுகதைகள் கொடுக்கும் அனுபவத்துடன் மேற்சொன்ன தகவல்களும், இன்னும் பலவும் இந்த தொகுப்பிலே எங்களுக்கு கிடைக்கின்றன.

கார்ல் இயக்னெம்மா தான் எழுதும்போது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு தயார் செய்வதுபோல சிறுகதைக்கும் ஆயத்தம் செய்வதாக சொல்கிறார். பல்வேறு விதமாக ஓர் ஆராய்ச்சியை மேலெடுப்பது போல சிறுகதைகளையும் அவர் நூறுவிதமாக ஆராய்கிறார். விடாமுயற்சியும், கற்பனையும், கடும் உழைப்பும் இரண்டுக்குமே தேவைப் படுகிறது. அதே மாதிரியான உத்தியைத்தான் ஆசி. கந்தராஜாவும் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. ஆனால் ஒரு கூடிய லாபம். விஞ்ஞான அறிவுடன் பலநாட்டு மனிதர்களின் அனுபவங்களும் கதைகளை அலங்கரிக்கின்றன. ஒரு சிறுகதையில் இருவிதமான இன்பம். அந்த விதத்தில் இது ஓர் அபூர்வமான தொகுப்பு. ஆசிரியர் மேலும் மேலும் எழுத என் வாழ்த்துக்கள்.


அ.முத்துலிங்கம்


ரொறொன்ரோ
26
நவம்பர் 2017

 

2.     உயரப்பறக்கும் காகங்கள்: இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதியின் பார்வையில்….!

ரசியல் நிர்ப்பந்தத்தின் காரணமாகப் புலம் பெயர்கின்றவர்களுக்கு இது ஒரு கொடுமையான அநுபவ மாக இருந்தாலும், புலம் பெயர்கின்றவர்களுக்குப் படைப்புத் திறன் இருந்தால், அது இலக்கியத்துக்கு ஒரு மாபெரும் லாபமாக அமைந்துவிடுகிறது. விலாதிமர் நபகாவ், ரஷ்யாவிலேயே இருந்திருந்தாரானால், அவரால் ‘லோலிதா’ (Lolitha) எழுதியிருக்க முடியுமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம். ஆஸ்திரேலியாவிலிருக்கும் திரு. ஆசி கந்தராஜாவின் சில கதைகளைப் படித்த போது எனக்குள் ஏற்பட்ட சிந்தனை இது.

நான் படித்த இவருடைய கதைகளில் ஒன்று அவர் தாய் மண்ணாகிய ஈழம் பற்றியது. நான்கு ஆஸ்திரேயாவையும், மூன்று ஆப்பிரிக்காவையும், ஒன்று ஜப்பானையும், ஒன்று பங்களாதேஷையும் நிலைக்களனாகக் கொண்டவை.

மண்ணைப் பொறுத்தவரையில் ஈழக்கதை ஒன்று என்றிருந்தாலும், பார்வையில், நான் படித்த பத்துக் கதைகளிலும் ஈழக் கலாசாரச் சார்பு இருந்து கொண்டிருக்கின்றது என்பதுதான் இக்கதைகளின் தனிச்சிறப்பு. இக்கலாசாரச் சார்பு, இன்னொரு நாட்டின் வாழ்க்கை மதிப்பீட்டு அளவு கோல்களை உயர்குடிப் பார்வையுடன் அணுகவில்லை என்பதுதான் இன்னொரு சிறப்பு. ஏனெனில், ஒவ்வொரு சமூகத்தின் வாழ்க்கை மதிப்பீட்டுடன், அச்சமூகத்தின் அன்றாட வாழ்க்கையின் சௌகர்ய அசௌகர்யங்களைப் பொறுத்தே அமைகின்றன என்பதைப் படைப்பாளியான கந்தராஜா தெளிவாக உணர்ந்து வைத்திருக்கிறார்.

வெள்ளிக்கிழமை விரதம்’ என்ற கதை இதை நன்கு அறிவிக்கிறது.

வெள்ளிக்கிழமை விரதம் காக்கும் வீரசிங்கம் ஆப்பிரிக்க நாடொன்றுக்கு விரிவுரைகள் ஆற்றச் செல்கிறார். அங்கு அவரால் அவ்விரதம் காக்க இயலவில்லை என்பதால் வேதனை மேலிட்டுத் தம் கலாசாரத்தைத் தொலைத்து விட்டோமே என்ற ஏக்கத்திலிருக்கிறார். அவர் பல்கலைக் கழக மாலை வகுப்புக்களுக்கு வெள்ளிக்கிழமைதோறும், பதிவு செய்து கொண்ட மாணவிகள் ஏன் வருவதில்லை என்பது அவருக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது. புரியாத புதிராகவும் அது இருக்கிறது. மாணவர்களை அவர் வினவிய போது, அவர்களுடைய மர்மப்புன்னகையே இதற்கு விடை யாக அமைகின்றது.

ஆப்பிரிக்காவில், பெண்ணுக்குத்தான் ஆண் வரதட்சிணை தரவேண்டுமென்பதை அவர் அறிகிறார். பல்கலைக் கழக மாணவன் மொறிஸ், குளோரியாவைக் காதலிக்கின்றான். அவள் விலையாக, அவள் தகப்பன் ஒரு பெரும் தொகையை நிர்ணயம் செய்திருக்கிறான். மொறிஸ், வீரசிங்கம் தங்கியிருக்கும் ஹோட்டலில், பணிப்பையனாகப் பகுதி நேர வேலையிருக்கிறான். சமூகவியல் மாணவனான அவன், வீரசிங்கத்துக்கு அவனுடைய சமூகத்தின் மரபுகளை விளக்குகிறான்.

மொறிஸ் நேசிக்கும் குளோரியா, அழகான, அருமையான பெண். அவளுக்கு மொறிஸ்பால் ஆழ்ந்த காதல் இருந்தும், அவள் பணி ஆற்றும் ‘Bar’க்கு வரும் ஆண்களுடன் மிக நெருக்கமாகப் பழகுவதுதான், தமிழ்க் கலாசாரத்தைச் சார்ந்த வீரசிங்கத்துக்கு முரண்பாடாகத் தெரிகிறது. இதுபற்றி அவர் குளோரியாவை ஒரு நாள் கேட்டே விடுகிறார். அவள் சொல்லிய பதில் அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

அவளுடைய தகப்பன் நிர்ணயித்திருக்கும் அவள் விலையை, மொறிஸ்ஸின் சம்பாத்தியத்தால் மட்டும் கொடுத்து விடமுடியாது. அவளும் சம்பாதித்தாக வேண்டும். அப்பொழுதுதான் அவள் மற்றைய ஆண்களுடன் ஏன் நெருங்கிப் பழகுகிறாள் என்று அவருக்குப் புரிகிறது. வெள்ளிக்கிழமை மாலை வகுப்புக்களுக்கு, மாணவிகள் ஏன் வருவதில்லை என்பதும் புரிகிறது. அவர்கள் காதலிக்கும் இளைஞர்களைத் திருமணம் செய்து கொள்ள, வெள்ளிக்கிழமை மாலைப்பொழுதுகளில் அவர்கள் சம்பாதித்தும் கொண்டி ருக்கிறார்கள்!

இது அவர்களுடைய ‘வெள்ளிக்கிழமை விரதம்’!

பெண்களுக்கு மட்டும் ‘கற்பு’ என்ற ஒருதலைக் கோட் பாட்டைச் சிலுவையாக அவர்கள் கைகளில் கொடுத்துச் சுமக்கச் செய்யும் கலாசாரத்துக்கு, இது முரண்பாடாகத்தான் தெரியுமென்பதையும் அவர்புரிந்து கொள்ளுகிறார்.

இது ஓர் அற்புதமான கதை.

முன்னிரவு மயக்கங்கள்’ என்ற கதையில் புலம் பெயர்ந்த புதிய கலாசாரச் சூழ்நிலையில், ஒவ்வொருவரும் எப்படி முகமூடி அணிய வேண்டிருக்கிறதென்ற கதையை அங்கதம் தோன்றப் புலப்படுத்துகிறார் கந்தராஜா.

முகமூடி அணிய ஏற்ற இடம் வீடு தான். வந்திருக்கும் ஒவ்வொருவரும் நடித்துக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம். பிறந்த மண் விடுதலைப் போராட்டத்தில் அகதிகளாகப் போன வன்னி மக்களின் நிவாரணத்துக்குக் கொடுக்க வரும் நன்கொடையும், சிட்னி நகரில் ஒரு மாலைப் பொழுது விருந்தில் ஒவ்வொருவரும் தம்மை அடையாளப்படுத்திக் காட்டிக் கொள்ளும், தன் முனைப்புப் போராட்டத்தின் சின்னமாக அமைந்து விடுகிறது! தமிழர்கள் தங்கள் கலாசார அடையாளமாகக் காட்டிக் கொள்ளும் முருக பக்தியும் இத்தகைய போராட்டந்தான் என்பதை ‘கோபுர தரிசனம்’ என்ற கதையில் அழகாகச் சித்திரித்துக் காட்டுகிறார் ஆசிரியர். ‘உயரப் பறக்கும் காகங்’களில், ஆசிரியர் ‘காகங்கள்’ உயரப் பறக்க இயலாது என்பதையும், அவை தரைக்கு வந்துதான் ஆக வேண்டுமென்பதையும் ‘சுகுமார்’ என்ற கதாபாத்திரம் மூலம் உணர்த்துகிறார். வேலையைப் புறக்கணித்து ஆகாசத் தாமரையாக மலர நினைப்பவர்கள், அது வெறும் தோற்ற மயக்கம் என்று உணரும்போதுதான், தம் வாழ்க்கை இங்குமில்லாமல், அங்கு மில்லாமல், திரிசங்கு நரகமாகிவிட்டதே என்று அல்லலுறு கிறார்கள்.

Ironyதான் கந்தராஜா அவர்களின் எழுத்தின் அடிப்படை பலம். அவரின் ஒவ்வொரு கதையிலும் அது மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. வாசிக்கின்றவர்களின் முகத்தில் புன்முறுவலைத் தோற்றுவிக்கும், நாசூக்கான அங்கதம், நீரோட்டம் போன்றவை இவருடைய இயல்பான நடையை அணி செய்கின்றது.

இவர் இன்னும் நிறைய எழுத வேண்டுமென்பது என் விருப்பம்.

இந்திரா பார்த்தசாரதி (2003)

330, டி.டி.கே. சாலை

சென்னை – 18.

 

4. பாவனை பேசலன்றி: பிரபஞ்சன்

அறம் சார்ந்த மனதின் கலை விழிப்பு

சி.கந்தராஜாவின் ‘பாவனை பேசலன்றி’ சிறுகதைத் தொகுதிக்கு, முன்னுரையாகச் சில உரைப்பதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு.

முன்னுரை என்கிற ஹோதாவில், புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கதைகள் ஒவ்வொன்றாக எடுத்துச் சுருக்கமாகச் சொல்லி நயம் காண்பது சரி இல்லை என்பது என் கருத்தாகும். ஏன் எனில், கதைகளைத் திரும்பச் சொல்வது, கூறியது கூறல் என்கிற பிழை. அத்தோடு சுருக்கங்களில் கதை இல்லை. கதை, விஷயத்திலும் கூட இல்லை. மாறாக, சொல்லும் முறையில், உணர்த்தும் நெறியில் கதை இருக்கிறது என்பது என் கருத்து.

என் நண்பர் ஆசி. கந்தராஜாவின் கதைகள் அனைத்தையும் ஒரு சேரப் படிக்கையில், எனக்குத் தோன்றும் கருத்து இதுதான். அறம் சார்ந்த மனித விழுமியங்களை, மனிதம் சார்ந்த மதிப்பீடுகளை, மனிதர்கள் அணிந்து கொள்ளும் பாவணை முகமூடிகளை, அவர் கதைகளாக எழுதுகிறார் என்பதே நான் வந்து சேர்ந்த முடிவாகும்.

எல்லாக் காலத்திலும் எழுத்து, மானுடம் சார்ந்த அறங்களை, விழுமியங்களைப் போதித்து வந்திருக்கிறது. போதனை என்பது, சமயம் சார்ந்த பாவணை அல்ல. மாறாக, அன்பு சார்ந்த பகிர்வு. இளங்கோ அடிகளுக்கு, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று, பத்தினிப் பெண்டிரை உலகம் தொழும் என்று சொல்ல வேண்டி இருந்தது. ஆகவே, அவர் சிலம்பை ஒரு கருவியாகக் கொண்டார். சாத்தனாருக்கு, அறக்கோட்டம் இருந்தால் சிறைக் கோட்டத்துக்கு இடமில்லை என்று சொல்ல விருப்பம். அது, மணிமேகiலை. கம்பனுக்கு, உடையாரும் இல்லாரும் இல்லாத உலகம் காண ஆசை. ஆகவே ராமனை முன் நிறுத்த வேண்டி இருந்தது. மனிதன், சக மனிதன் மேல் ஆதிக்கம் செலுத்த அவாவுகிற கீழ்மையைத் தன் போரும் அமைதியும் மூலமாக டால்ஸ்டாய் சொல்கிறார்.

வேறு எக்காலத்திலும் இல்லாத அச்சுறுத்தல்கள், நம் காலத்தின் முகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இவை அறத்துக்கு எதிராக, சகல கயமைகளும் சேர்ந்து விடும் சவால் என்றே நான் கருதுகிறேன். இந்தச் சவாலை, எழுத்தாளர்களே முதலில் ஏற்றாக வேண்டியிருக்கிறது. ஏன் எனில், மனித குலத்தின் மேல் நமக்குள்ள அக்கறை அது.

பாவனை பேசலன்றி’ என்கிற, இந்தத் தொகுப்பில் உள்ள சிறந்த கதை, அறம் சார்ந்த, மனித விழுமியம் சார்ந்த என்று கௌரவமாகச் சொல்லப்படும் மூத்தவர்கள், தந்தை, தாய்மார்கள், தம் சந்ததியரால் அவமானப்படுத்தப்படும் அவலம் தான் இக் கதையின் மூலம். தம் முழு வாழ்க்கையை, அதன் இனிப்பு பகுதிகள் எதனையும் அநுபவியாது தம் குழந்தைகள் சுக சௌகரியத்துக்கே சமர்ப்பணம் செய்து, தம் உழைப்பின் கடைசித் துளியையும் அவர்களுக்கே தத்தம் பண்ணி, சாறு இழந்து சக்கையாகிப்போன தம் இறுதி நாட்களில், பிள்ளைகளாலும் மருமகள்களாலுமே கீழ்மைப்படுத்தப்படும் அவலம், மிகவும் குரூரமானது. இந்தக் குரூரங்களைச் சற்றும் குற்ற மனம் இல்லாது செயல்படுத்தும் பல புதிய தலைமுறையை நான் கண்டிருக்கிறேன். ஒரு ஆசிரியரின் – முன் மாதிரி ஆசிரியரின் – முழு வாழ்க்கையே இந்தக் கதையில் மிகவும் சுருங்கச் சொல்லப்பட்டுவிடுகிறது. இது ஆசிரியரின் மிக முக்கியமான கதை.

ஒரு நீளும் கை, கந்தராஜாவின் வார்த்தைகளுக்கு முளைத்து விடுகிறது. அந்தக் கை நம் தோளைத் தொடுகிறது. தொட்டு, நம் கவனத்தை அவர் சொல்லும் விஷயத்தின் பக்கம் நகர்த்துகிறது. உணர்வு கொப்பளிக்க, ஆனால் உரக்கச் சத்தம் போடாத நளினம், ஆசிரியருக்கு கைவந்து விடுகிறது. இதுதான் அவரை தனித்துவப் படுத்துகிறது. சாதாரண சொற்கள், சத்தியத்தில் நனைந்து விடுகின்றன.

எனக்குக் கதைகளைக் காட்டிலும், கதைகளின் பின் இருக்கும் எழுதியவரின் ஆத்மா முக்கியமாகப்படுகிறது. ஏன் எனில், எழுத்து என்பது, எழுதுபவரின் மனப் பெரு வெளியில் விளைந்த ஒரு அடுக்கு மாத்திரமே. எழுதப்படாத பல அடுக்குகள், இன்னும் எழுதுபவரின் கைவசமே இருக்கிறது. கந்தராஜாவின் ஹிருதயம் இம் மாதிரியான பல அடுக்குகள் கொண்டது.

அறம் சார்ந்த மனது, வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் சத்தியத்தையே அவதானிக்கிறது. வாழ்க்கை, மாற்றுக் குறைகிற போதெல்லாம், எழுத்தாளர்கள் வெளிப்படுகிறார்கள்.

சோஷலிசம், கம்யூனிசம் என்றெல்லாம் அர்த்தமுள்ள வார்த்தைகளை பேசிக்கொண்டே, ஆனால் யதார்த்தத்தில், அந்த லட்சியங்களுக்கு விரோதமாக வாழ்கிற மனிதர்களை, அந்த ‘சிவந்த மண்’ணில் பார்க்கையில் கந்தராஜா கலவரப்பட்டுப் போகிறார். மானுட வசந்தத்துக்கே கட்டியம் சொல்ல வந்த ஒரு பூமியில் லஞ்சமும் ஊழலும் எங்ஙனம் தோன்ற முடியும்? ஆனால் தோன்றியது மட்டுமல்ல, செழுமையாகவும் போஷிக்கப்படுகின்றது என்பதே உண்மை. என்ன காரணம்? தத்துவத்தை மனித அழுக்குகள் வென்று விடுகின்றன என்பது உலக வரலாறு. புத்தரின் மறைவுக்குப் பிறகான ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாகவே, புத்தர் முகம், நிஜமுகம், தத்துவத்தின் பெயராலேயே மறைக்கப்படுகிறது. மாவோவுக்கும் கூட இதுதான் நிகழ்ந்தது. மனிதர்கள், மகத்தானவர்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு அவர்கள் அற்பமானவர்கள் என்பதும் உண்மைதான். வேதத்துக்கும் அவர்கள் கட்டுப்படுவார்கள். சாத்தானுக்கும் அவர்கள் ஏவல் செய்வார்கள்.

இது தத்துவத்தின் தவறா? அல்லது அதை நடைமுறைப் படுத்துகிறவர்களின் தவறா? பெரும்பாலும், தத்துவங்கள், மனித முழுமையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு உருவாக்கப்படுகிறது. நடைமுறையோ, மனிதர்களின் துர்பலங்களோடு நடைபோட வேண்டி இருக்கிறது.

கந்தராஜா, தனக்குள் குழம்பி, தெளிந்து, தனக்குள் விடை காண முயல்கிறார். இந்தக் குழப்பமும் ஆறுதலும் வள்ளுவருக்கே உண்டு. ஒருவன் பல்லக்கில் உட்கார்ந்து போவதற்கும், சிலர் அவனைச் சுமப்பதற்கும் என்ன ஹேது? என்ன புண்ணியத்தை அவன் செய்தான்? என்ன பாவத்தை இவர்கள் செய்தார்கள்? விடை தெரியத்தான் இல்லை.

ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட, ஒரு குற்றவாளி தப்பிவிக்கப் படுகிறான். மிகவும் முக்கியமான கேள்வி இது. வாழ்க்கை, தர்க்கங்களில் அகப்படவில்லை. இது ஆராய்ச்சிக்குட்பட வேண்டியது. முடிவு கூறத் தக்கதா? எனக்கு தெரியவில்லை. வாழ்க்கையின் இந்தப் புதிர்களை, எழுத்தாளர்கள் தொட வேண்டும், விடைகாண வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. கந்தராஜா தொடுகிறார். ஆராய்கிறார்.

மனித இருப்பு, வேறு எப்போதையும் விட இப்போது ஸ்திரம் அற்று பாசி போல், தண்ணீரில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. அல்லல் பட்டு இலங்கையிலிருந்து தமிழ்நாடு திரும்பிய ஆதித்தமிழன் இங்கு இலங்கையனாகவே கருதப்படுகின்றான். இலங்கையிலோ கள்ளத்தோணியாகவே இருக்கிறான் என்றால், அவன் பூமி எது? இதை முன் எடுத்து ஒரு கதையைக் கந்தராஜா எழுதியிருக்கிறார்.

தமிழனாகட்டும், இலங்கையனாகட்டும், அவன் மண் எது? இருபதாம் நூற்றாண்டு உலக விளிம்பில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் கேள்வி இது. மனிதன் எங்கே எவனுக்குச் சொந்தம்? வரலாறு என்ன வெனில், மனிதன் எங்கே காலூன்றி நிற்கிறானோ, அதுதான் அவன் மண். எந்த மண் தனக்கானது என்பதை அவன்தான் தீர்மானிக்க வேண்டுமேயல்லாமல், அரசுகள் அல்ல. போலீஸ் அல்ல. கங்காணிகள் அல்லர். எந்த நிலத்தின் மேல் மனிதனின் வியர்வை விழுந்ததோ அதுதான் அவன் மண். பூமிப் பரப்பு என்பது மனிதர் வாழும் நிலம். இதை, பூகோள வரம்பிட்டது யாரின் செயல்? அதுக்கு, மனிதன் பொறுப்பல்ல. கந்தராஜா, இந்த அடிப்படைக் கேள்வியைத் தான் எழுப்புகிறார்.

கந்தராஜாவின் கதைகள், கந்தராஜாவின் கதைகளே! அதாவது அவருடைய அனுபவம் சார்ந்த கதைகள். அதனால்தான் அவருடைய கதைகள், நிஜமான அனுபவத்தை வாசகர்க்கு மாற்றித் தருகின்றன. கதைகளின் பலம், அவை சொல்லப்பட்ட விதத்தில் நடந்திருக்கும் என்று நம்பும் படியாக இருப்பதுதான். இந்தக் கதைகள், உண்மைகள் என்று வார்த்தை தோறும் நமக்கு அனுபவமாகிறது.

கந்தராஜாவின் வார்த்தைகள், சம்பாஷணைகள், யாழ்ப்பாண வழக்குச் சொற்கள். இவை, ரசிக்கத்தக்க வகையில் அமைந்து கதைகளுக்கு ஒரு பிரதேசத் தன்மையைத் தந்துவிடுகின்றன. கதை மாந்தர்கள், புலம் பெயர்ந்து, புதிய பூகோளக் கோடுகளுக்குள் வாழ நேர்ந்தாலும், தம் ‘சுயம்’ மறக்காதவர்கள். சுயத்தை தன் இயல்பாகவே வெளிப்படுத்துகிறார்கள்.

கந்தராஜாவின் அசல் பலமாக நான் கருதுவது மனிதர்கள் மேல் இவருக்கு இருக்கும் அபிமானம். மனிதர்களை அவர்கள் பலத்தோடும் பலவீனத்தோடும் இவர் ஏற்றுக் கொள்கிறார். தொட்டிகளில் வளரும் ‘போன் சாய்’ செடிகளைப் போல, அவர்கள் வடிவமைக்கப்படவில்லை. அவர்கள், அவர்கள் இஷ்டத்துக்கு இயங்குகிறார்கள். அந்த இடங்களில் கதை வளர்கிறது. சம்பவங்கள், கச்சிதமாக வளர்ந்து, கதையின் தத்துவத்துக்குள் பிரவேசிக்கின்றன. அநாவசியமான வம்பளப்புகள் இல்லாத கதைகள். கதைகள் எதை எழுத வேண்டும், எந்த அளவுக்கு எழுதவேண்டும் என்று அவருக்குத் தெரிகிறது. பெரும்பாலான கதைகள் வடிவ நேர்த்தியும், அழகும் கொண்ட கதைகள்.

ஆசி. கந்தராஜா அவர்கள் அவர் துறையில் பெரிய விஞ்ஞானி, உலகப் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் அவரைத் தங்கத் தட்டில் வைத்து ஏந்துகின்றன.

இது அவரிடம் பக்குவத்தை வளர்த்து இருக்கிறது. முற்றிய நெற் பயிர் தலைவணங்குவது போல், இவர் விளங்குகிறார். இவர் கதைகளில்கூட, அந்தக்குணம் வெளிப்படுகிறது. கதையின் சகல கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டே இவர் எழுதுகிறார். மூடப்பட்ட வாழ்க்கை அல்ல இது. திறந்த மனத்துடன் செய்யப்பட்ட வாழ்க்கை விசாரணைகள் இவர் கதைகள். எந்த இடத்திலும் நீதிபதி ஆகவில்லை. மாறாக, ஒரு பார்வையாளன் என்கிற ஸ்திதியில் கதை சொல்கிறார். இந்த எளிமை, மனதில் முதிர்ச்சியைக் காட்டுகிற பண்பாக எனக்குத் தோன்றுகிறது. இது அபூர்வம்.

இந்தக் கதைகள், நல்ல வாசக அனுபவம் தருகிற கதைகளாக எனக்குத் தெரிகிறது. இவைகளைப் படிக்க நேர்ந்ததில், நான் மகிழ்ச்சி அடைந்தேன். எந்த வாசகருக்கும் இந்த அனுபவம் சித்திக்கும் என்பது என் நம்பிக்கை.

பிரபஞ்சன்(2000)      

 

No comments:

Post a Comment

.