பூக்களே, காதல் செய்யுங்கள்..!
அறிவியல்புனைகதை
ஆசி கந்தராஜா
இன்று அரச விடுமுறை. என்னுடைய மனைவி மெல்பனில் வசிக்கும் மகள் வீட்டுக்குப்போக, நான் சோம்பலை அடைகாத்து, வீட்டில் பொழுதைப் போக்கினேன். காலை பத்து மணி இருக்கும்.
கைத்தொலைபேசி சிணுங்கியது. மறு முனையில் செல்லத்துரை அண்ணை.
இண்டைக்கு வீட்டிலை நண்டுக்கறி தம்பி, மத்தியானச்
சாப்பாட்டுக்கு வந்திட்டுப் போவன், என படு கரிசனையாக அழைத்தார்.
சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது எனக்குத்
தெரியும். இருந்தாலும் தங்கம்மா அக்காவின் கைப்பக்குவத்தில் சமைக்கப்படும் காரமான
நண்டுக்கறியை நினைத்ததும் நாக்கில் ஜலம் ஊறியது. அடுத்த அரை மணி நேரத்தில்
செல்லத்துரை அண்ணை வீட்டில் ஆஜரானேன்.
நண்டுக்கறி மூக்கைத் துளைத்தது. தங்கம்மா அக்கா
நண்டுக்கறிக்குத் தோதாக குசினியில் முருங்கை இலைச் சொதி வைத்துக்கொண்டு நின்றார்.
பின் வளவில், நட்ட கண்டுகளுக்குத் தண்ணிர் விட்டபடி, இஞ்சாலை வாதம்பி, எனக் குரல் கொடுத்தார் செல்லத்துரை அண்ணை.